Ad Widget

சுழிபுரம் புத்தர் சிலை விவகாரம் – பாரிய போராட்டம் வெடிக்கும் எச்சரிக்கை!!

சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலய பகுதியில் வைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றாவிட்டால் பாரிய போராட்டம் வெடிக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரணில் ஜனாதிபதியாக வந்ததன் பின்னர் இவ்வாறான ஆக்கிரமிப்புகள் மிகத் தீவிரம் பெற்றுள்ளதாகவும் அதன் மற்றுமொரு பரிமாணம் தான் இந்த புத்தர் சிலை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட குழுவினர் நேற்றையதினம் (5.3.2024) இரவு புத்தர் சிலை வைக்கப்பட்ட பகுதிக்கு சென்று அதனை பார்வையிட்டனர்.

அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் சுகாஸ் மேலும் தெரிவிக்கையில், “சுழிபுரத்திலே புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டதாக எங்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து நாங்கள் இங்கே வந்த நிலையில் இந்த தகவல் உண்மையானது.

அத்தோடு குறித்த புத்தர் சிலையானது சவுக்கடி பிள்ளையார் கோவிலுக்கு பின்பாகவும் இராணுவ முகாமிற்கு முன்பாகவும் வைக்கப்பட்டுள்ளதுடன் இது திட்டமிட்ட ஒரு ஆக்கிரமிப்பு.

மேலும் கோயிலை ஆக்கிரமிக்கின்ற வகையிலே இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமையால் இதை நாங்கள் அனுமதிக்க முடியாது.

ஏனென்றால் தமிழர் தாயகம் எங்கும் தற்சமயம், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வந்ததன் பின்னர் ஆக்கிரமிப்புகள் மிகத் தீவிரம் பெற்றுள்ளதோடு அதனுடைய அடுத்தகட்ட பரிமாணம் தான் இந்த புத்தர் சிலை.இந்த புத்தர் சிலையை உடனடியாக அகற்றும்படி நாங்கள் இராணுவத்தினரிடம் கூறுவதுடன் நீங்கள் அதனை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க விட்டால் நாங்கள் வெகு விரைவில் இந்தப் பிரதேசம் மக்களோடும் மற்றும் இராணுவ முகாமை சுற்றியுள்ள அமைப்புகளுடனும் கதைத்து விட்டு விசேடமாக கடற்றொழிலாளர் அமைப்புகளுடன் கதைத்து விட்டு இதற்கு எதிராக பாரிய போராட்டங்களை முன்னெடுக்க இருக்கின்றோம்.

அத்தோடு எப்போது அந்தப் போராட்டங்கள் என நாங்கள் மக்களுக்கு அறிவிப்பதோடு மக்கள் அனைவரும் இந்த இடத்திற்கு வர வேண்டும் அவ்வாறு இல்லையேல் தமிழர் தாயகம் பறிபோகும் இதை எவராலும் தடுக்க முடியாது.

நாங்கள் கதைப்பதை கூட இராணுவம் அச்சுறுத்தி படம் எடுக்கின்றமையால் தங்களைக் கதைக்க வேண்டாம், படம் எடுக்க வேண்டாம் என அச்சுறுத்தல் செய்கின்றார்கள்.

இந்நிலையில் இந்த அச்சுறுத்தலை தாண்டித்தான் நாங்கள் இந்த இடத்தில் நிற்கின்றோம் ஏனென்றால் இது நமது மக்களின் எதிர்கால இருப்புடன் சம்பந்தப்பட்ட விடயமென்பதால் மக்களே வெளிப்படையுங்கள் அல்லது இந்த நாட்டில் தமிழர்கள் வாழ முடியாத நிலை ஏற்படப் போகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts