Ad Widget

சுமந்திரனின் கொடும்பாவி எரிப்புக்கும் எனக்கும் சம்பந்தமில்லை – சுரேஸ் எம்.பி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மரியாபரணம் சுமந்திரனின் கொடும்பாவி, வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாக சனிக்கிழமை(21) எரிக்கப்பட்டமைக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

SURESH_PREMACHANDR

காணாமற் போனோர் தொடர்பில் உண்மை நிலையை வெளிப்படுத்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை அறிக்கையை மார்ச் மாதம் சமர்ப்பிக்க கோரியும் சனிக்கிழமை (21) யாழில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில், சுமந்திரனின் உருவப் பொம்மை எரிக்கப்பட்டமை தொடர்பில் சுரேஸ் எம்.பி.யிடம் வினாவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டேன். உருவப்பொம்மையை எரித்தது ஒரு தனிப்பட்ட நபர். அதற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.

தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைக்கு முரணாக சுமந்திரன் செயற்பட்டு வருகின்றார்.

எங்களுக்குத் தெரியும்படியாக எதுவும் செய்வதில்லை. தனது தீர்மானத்தின் படி நடந்து வருகின்றார். எனக்கும் அவருக்கும் கருத்து முரண்பாடு வருவது வழமையானது. அதற்காக கொடும்பாவி எரிக்கும் அளவுக்கு இல்லை.

சுதந்திர தினத்தில் கலந்துகொண்டமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுதந்திரதினத்தை பகிஷ்கரிக்கவில்லையென கூறியமையாலேயே என சுமந்திரன் ஊடகங்களுக்கு கூறியிருந்தார். நாங்கள் செல்லமாட்டோம் எனக்கூறியிருந்தோம்.

அவர் ஒரு சட்டத்தரணி என்பதால் செல்லமாட்டோம் என்று தானே கூறினார்கள், பகிஷ்கரிப்பதாக கூறவில்லையென வாதாடுகின்றார். அவரது சட்டத்திறன் நீதிமன்றத்தில் இருக்கவேண்டும். அதனை எங்களுக்கு பயன்படுத்தக்கூடாது. நாங்கள் படிப்பறிவில்லாத முட்டாள்கள் இல்லை.

சுமந்திரனுக்கு தைரியம் இருந்தால் தனிப்பட்ட முறையில் சுதந்திர தினத்தில் கலந்துகொண்டேன் என்று மக்கள் மத்தியில் கூறவேண்டும். சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டமை தொடர்பில் தமிழரசுக்கட்சியும், கூட்டமைப்பும் விசாரணை நடத்தவேண்டும் என்றார்.

Related Posts