சுன்னாகம் சந்தைப் பகுதியில், முகமூடி அணிந்திருந்த நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் படுகாயமடைந்த பொலிஸார் இருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) மதியம், இடம்பெற்றுள்ளது.
இரண்டு மோட்டார் சைக்கிளில் இலக்கத்தகடுகள் இன்றி, முகங்களையும் துணியால் மறைத்தபடி வந்தவர்களே இவ்வாறு வாள் வெட்டை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தில் காயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரில் ஒருவர், கேகாலையைச் சேர்ந்த 52 வயதுடைய நிமால் பண்டார என்றும் மற்றையவர் பி.எஸ். நவரத்ன என்றும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
சிவில் உடையில் இருந்த இருவரும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சுன்னாகம் நகரத்தில், நேற்று இடம்பெற்ற சிறிய சம்பவமொன்றில் காயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
சுன்னாகம் நகரில், கடையொன்றில் கப்பம் பெறுவதற்கு, முகங்களை மூடியவாறு, இலக்கத்தகடுகள் அற்ற மோட்டார் சைக்கிளில் வந்த அறுவர், அந்தக் கடை உரிமையாளருடன் முரண்பட்டுள்ளனர்.
இதன்போது, அக்கடைக்கு அண்மையில் ஆயுதங்கள் இல்லாமல் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர், இதில் தலையிட்டுள்ளனர். அதன்போதே அக்கொள்ளையர்கள், பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீதும் வாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.