வடக்கு மாகாணத்தில் பொதுமக்களுக்கு சுகாதாரமான உணவுப்பண்டங்கள் மற்றும், சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதிப்படுத்தும் முகமாக விசேட செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
‘உலக நாடுகளில் இன்று தொற்றுநோய்களின் தாக்கம் வெகுவாக குறைந்து வருகின்றது. இதற்கு காரணம் தொற்றுநோய்களை கட்டுப்படுத்தும் தடுப்பூசி ஏற்றல் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளாகும்.
அண்மைக்காலமாக வடக்கு மாகாணத்தில் உணவினாலும், குடிநீரினாலும் பரவும் நோய்கள் அதிகரித்துள்ளன. யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டத்தில் இவ்வாறான நோய்கள் பரவுவது அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டள்ளது.
பொதுமக்களுக்கு சுகாதாரமான பாதுகாப்பான உணவையும் நீரையும் வழங்கவேண்டியது எமது கடமையாகும். இதற்கான விசேட செயற்றிட்டமொன்றினை வடக்கு மாகாண சுகாதார அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.
குறிப்பாக உணவகங்கள் மற்றும் உணவு தயாரிக்கும் நிறுவனங்களின் சுகாதாரம் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படவுள்ளது. நமது நாட்டில் ஏற்கெனவே உணவுப்பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் இருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலுள்ள குறைபாடே இவ்வாறான பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகின்றது. இந்த விசேட செயற்றிட்டத்தின் மூலம் உணவுப்பாதுகாப்புச் சட்டங்கள் இறுக்கமாக நடைமுறைப்படுத்தவுள்ளோம்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.