Ad Widget

சுதந்திர தினத்தில் போராளிகளுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது!! – சம்பந்தன்

“இரத்தம் சிந்தி, சத்தியாக்கிரகம் இருந்து இழந்து – அழிந்து போன ஒரு சமூகத்திற்காக உருவானது தான் இந்த மாகாண சபை. எனவே, கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் பதவியை வகிக்க எமக்கு உரிமை இல்லையா?” – இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

sambanthan 1_CI

“கிழக்கு மாகாணத்திற்கு ஒரு முஸ்லிம் முதலமைச்சர் வருவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கவில்லை. வடக்கு, கிழக்கிற்கும் சேர்த்து ஒரு முஸ்லிம் முதலமைச்சர் வந்தாலும் நாம் அதனை வரவேற்போம். ஆனால், அது நியாயபூர்வமானதாக அமைந்திருக்க வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

திருகோணமலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்றின்போதே மேற்படி கருத்தை அவர் தெரிவித்திருதார்.

தொடர்ந்து உரை நிகழ்த்திய அவர்,

“கடந்த ஜனாதிபதித் தேர்தலும், அதன் விளைவுகளும் மக்களுக்கு பாரிய எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் தந்துள்ளன. இந்தத் தேர்தலானது தேர்தல் காலத்திற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னமே நடை பெற்றது. 17 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி 18 ஆவது திருத்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தி அமுல்படுத்தி ஒரு ஜனாதிபதிக்கு முடிவில்லாத அதிகாரத்தைக்கொண்ட ஜனாதிபதி முறைமை தோற்றுவிக்கப்பட்டது.

ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை எல்லாம் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவந்து விரும்பியபடி ஆட்சி நடத்தும் ஒரு முறையாக இந்த ஜனாதிபதி முறைமை ஆக்கப்பட்டிருந்தது. அரச வளங்களை முழுமையாக பயன்படுத்தப்பட்டிருந்தது. முறையான எதிர்க்கட்சி இருக்கவில்லை.

இந்த நிலையில் இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு மஹிந்தவை எதிர்க்கும் ஒரு வேட்பாளர் வெற்றி பெறுபவராக இருந்தால் மட்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரை ஆதரிக்கும் என்ற நிலைப்பாடு இருந்தது.

இது விடயமாக நான் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் பேசினேன். ஆட்சி மாற்றப்பட வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தோம். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த விதமான நிபந்தனைகளையும் முன்வைக்காது ஆதரவளிக்க முன்வந்தது இதற்கான காரணம். அந்தநிலையில் தமிழ்க் கூட்டமைப்பு முன்வைக்கும் நிபந்தனைகள் மஹிந்த ராஜபக்ஷ­வின் துவேசத்தனமான தேர்தல் பிரசாரத்திற்கு வாய்ப்பாக அமையும் என்ற காரணத்தினாலாகும். இந்த விடயத்தில் கூட்டமைப்பு மிகக் கவனமான நகர்வை மேற்கொண்டது.

தேர்தலுக்கு ஆறு நாட்கள் இருக்கும் நிலையில்தான் மைத்திரிக்கு ஆதரவளித்ததாக அறியத்தந்தோம். . மஹிந்த அரசை நாங்கள் எதிர்த்தோம். இன்று மைத்திரியுடன் இருப்பவர்கள் 17 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்வதற்கும் 18 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் ஆதரவு தெரிவித்தவர்கள்.

இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடங்கும். தேர்தலில் மஹிந்தவும் மைத்திரியும் சிறிய வாக்கு வித்தியாசத்தில் மாறி மாறி முடிவுகள் இருந்தும் சிறுபான்மை சமூகத்தின் ஒட்டுமொத்த மஹிந்த எதிர்ப்பே மைத்திரியை வெல்லச் செய்தது.

சிறுபான்மை மக்கள், அதிலும் தமிழ் மக்கள் தமது கடமையை சரிவரச் செய்திருந்தனர். ஏனைய மாகாணங்களை விடவும் வடக்கு, கிழக்கு மக்கள் ஒன்றிணைந்து இந்த வெற்றியை பெற்றுக்கொடுத்தனர். இன்று எமது பிரச்சினை சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. ஜெனிவாவில் இலங்கை சம்பந்தமான சர்வதேச விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. மனித உரிமை ஆணையாளருக்கு நான் ஒரு கடிதம் எழுதியுள்ளேன். ஐ.நா. விசாரணை அறிக்கை மார்ச் மாத ஜெனிவா அமர்வில் வெளியிடப்பட வேண்டும். இந்த நாட்டு மக்கள் உண்மையை அறிந்துகொள்ளவேண்டும். புதிய அரசு சர்வதேச அங்கீகாரத்துடன் நம்பத்தகுந்த உள்ளக விசாரணை ஒன்றை நடத்தவுள்ளது. அதன் நிமித்தம் மங்கள சமரவீர சுவிற்சர்லாந்து மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளார். நாங்கள் ஒன்றை வலியுறுத்துகின்றோம். உண்மை அறியப்படல் வேண்டும். இந்தப் பிரச்சினை நிரந்தரமாக தீர்க்கப்படல் வேண்டும். நியாயமானமுறையில் இதனை அவர்கள் பரிபூரணமாக ஏற்றுள்ளார்கள்.

மைத்திரியை எனக்கு நீண்டகாலமாகத் தெரியும். அவர் பற்றி பகிரங்கமாகக் கூறலாம். ஒரு கருமத்தை துணிவாகவும், நீதியாகவும் செய்யவேண்டும் என்பதில் உறுதியானவர். அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும். அது அரைகுறை தீர்வாக இருந்தால் தமிழ்க் கூட்டமைப்பு ஏற்காது. உலக நாடுகள் பலவற்றில் உள்ளது போன்று பொருளாதார, கலாசார அரசியல் ரீதியான அனைத்து உரிமைகளும் கொண்ட ஒரு தீர்வே இங்கு வேண்டப்படுவது.

கடந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. அது போரால் மரணித்த இராணுவத்தினர், போராளிகள், பொதுமக்கள் ஆகிய அனைவருக்குமாகவே செலுத்தப்பட்டது. யுத்தம் முடிந்துள்ளது. ஆனால், வடக்கு, தெற்கு உள்ளங்கள் ஒன்றிணையவில்லை என்று அங்கு ஜனாதிபதி மைத்திரிபால கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சர்வதேச சமூகத்தில் ஒரு மதிப்பு உள்ளது. நீங்கள்தான் இங்கு எங்களை கொண்டு வந்தவர்கள். நாங்கள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை விடவும், தமிழ் மக்களின் விசுவாசமான கூட்டமைப்பு என்றே குறிப்பிடுவேன்.

கிழக்கு மாகாண ஆட்சி முறைமை சம்பந்தமாக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. மாகாண ஆட்சி பற்றி அது முடிவெடுக்கும். விரைவில் தேர்தல் வரவுள்ளது. திருமலையில் இரண்டு ஆசனங் களைப் பெறுவது தமிழ் மக்களின் தார்மீகப் பொறுப்பு. இதற்கு வாக்களிப்பது ஒரு புனிதமான கடமையாகக் கொள்ளுங்கள்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களால் அளிக்கப்படும் வாக்குகள் இந்த நாட்டின் சிங்கள, முஸ்லிம் மக்களை உணரவைக்க வேண்டும். வடக்கு மாகாண சபை தேர்தலின் போது 30 ஆசனங்களுக்கு குறைவாகப் பெற்றால் நாம் தோல்வி என்றோம். ஆனால், அங்கு அமோக வெற்றி கிடைத்தது. தமிழ் முதலமைச்சரைப் பெற்றோம்.

கிழக்கின் நிலைமை வேறு. நாங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பேசினோம். ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேசினோம். ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது நலனைக் கொண்டு மஹிந்த அரசுடன் இணைந்தது. ஆனால், கிழக்கில் இரண்டு மாவட்டங்களில் பெரும்பான்மையை பெற்ற நாங்கள் முதலமைச்சர் பதவியைக் கேட்டதில் என்ன தவறு இருக்க முடியும்?

வடக்கு, கிழக்கு இந்த நாட்டில் 18 வருடங்கள் இணைந்து இருந்தது. இலங்கை நாடாளுமன்றம்தான் நிதி ஒதுக்கீடும் செய்தது. ஆனால், இணைத்த முறை பிழை என்று உயர் நீதிமன்றம் கூறியதாகக்கூறி அதைப் பிரித்தார்கள்.

மேலும், முஸ்லிம் காங்கிரஸின் தயவில் நாம் முதலமைச்சர் பெறுவது விரும்பத்தக்கதல்ல. எங்களுக்கு அநீதி செய்பவர்கள் அடையும் இலாபங்கள் குறுகிய காலதிற்குறியதே அது நிலையானதல்ல.

இரத்தம் சிந்தி, சத்தியாக்கிரகம் இருந்து இழந்து – அழிந்து போன ஒரு சமூகத்திற்காக உருவானது தான் இந்த மாகாண சபை. எனவே, கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சர் பதவியை வகிக்க எமக்கு உரிமை இல்லையா? இந்த போராட்டத்தில் எந்த முஸ்லிம் தலைவர்கள் கலந்துகொண்டு உரிமைக்காக போராடினார்கள். எனவே, இந்த மாகாண ஆட்சி முறையில் எமது அங்கத்தவர்கள் சில முடிவுகளை எடுக்கிறார்கள் அதற்கு நாங்கள் தடையாக இல்லாது யோசித்தல் வேண்டும். நாங்கள் ஒற்றுமையாக இருத்தல் வேண்டும். அதனை சர்வதேச சமூகத்திற்கு காட்டுதல் வேண்டும்” – என்றார்.

Related Posts