காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில், சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளரான முத்துதுரை இந்திரராசாவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை (30) முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வாரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த போது மேற்படி வேட்பாளர் மல்லாகத்தில் இருந்து சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்த தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அழைத்து சென்றிருந்தார்.
இது தொடர்பில் அவருடைய தொலைபேசி இலக்கத்துக்கு அநாமதேய அழைப்பினை மேற்கொண்டிருந்த சிலர், இவ்வாறான தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அழைத்து செல்வதை நிறுத்தி கொள்ளுமாறு மிரட்டியுள்ளதுடன், இனி வரும் நாட்களில் பிரசார நடவடிக்கைகளுக்கு மக்களை அழைத்து செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டால் 10ஆம் திகதி உன்னை கொல்ல நேரிடும் என மிரட்டியுள்ளனர்.
இது தொடர்பில் குறித்த வேட்பாளர், தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும், சந்தேகநபர்கள் அழைப்பினை மேற்கொண்ட தொலைபேசி இலக்கத்தினையும் பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.