Ad Widget

சுதந்திரக் கட்சியினர் சிலரை திருப்திப்படுத்த மைத்திரி அரசு தற்போது செயற்படுகிறது! அமைச்சர் ஹக்கீம் யாழ்ப்பாணத்தில் குற்றச்சாட்டு!

சிறுபான்மை மக்களின் வாக்குகள் மூலம் ஆட்சிக்கு வந்த மைத்திரிபால அரசு தற்போது சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலரைத் திருப்திப்படுத்துவதற்காகச் செயற்படுகிறது. எனவே சிறுபான்மை மக்களைப் பாதிக்கக்கூடிய 20ஆவது திருத்தத்தை அப்படியே நடைமுறைக்கு கொண்டு வந்தால் நாம் அனைவரும் இணைந்து எதிர்ப்போம். இவ்வாறு தெரிவித்துள்ளார் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம்.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வடபிராந்திய உதவிப்பொதுமுகாமையாளர் மற்றும் பிராந்திய முகாமையாளர் அலுவலகம் இன்று திங்கட்கிழமை யாழ்.பண்ணைப் பகுதியில் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் சிறப்புரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

இந்த அலுவலகம் இரணைமடுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகச் செயற்பட்டு வந்தது. இனியும் அவ்வாறே செயற்படும். தற்போது 40 ஆயிரம் ஏக்கருக்கு நீர்வழங்கக்கூடிய வகையில் இரணைமடுக் குளத்தின் நீர் கொள்ளளவு காணப்படுகிறது.

இந்த நிலையிலேயே விவசாயிகள் மேலதிக நீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வருவதற்கு தமது ஆட்சேபத்தைத் தெரிவிக்கின்றனர். எனவே எதிர்காலத்தில் அந்தக் குளத்தின் நீர்கொள்ளளவை 80 ஆயிரம் ஏக்கருக்கு ஏற்றதாக வீஸ்தரித்து அதன் பின்னர் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணத்துக்கான குடிதண்ணீர் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

வடக்கு கிழக்கிலும் தென்பகுதியிலும் உள்ள சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புக்களைப் புறந்தள்ளி 20ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்ற அரசு தீர்மானிக்குமானால் அது பெரும் பின்விளைவுகளையே கொண்டுவரும்.

சிறுபான்மை மக்களின் பேராதரவுடன் ஆட்சிக்குவந்த மைத்திரி அரசு தற்போது சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த சிலரைத் திருப்திப்படுத்துவதற்காகச் செயற்பட்டு வருகிறது. இப்படியொரு நிலையில் 20 ஆவது திருத்தம் சிறுபான்மை மக்களின் விருப்பங்களைப் புறந்தள்ளி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுமானால் நாம் அனைவரும் ஒன்றுகூடி எதிர்ப்போம்.

அதுமட்டுமின்றி ஜே.வி.பி மூன்றாவது தடவையாக தென்பகுதியில் கலவரத்தில் ஈடுபடும் நிலையையே இந்த 20 அவது திருத்தம் ஏற்படுத்தும். இதை ஒரு அபாய எச்சரிக்கையாக நான் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.- என்றார்.

இந்த நிகழ்வில் மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts