Ad Widget

சீரற்ற காலநிலை: யாழில் 23,304 குடும்பங்களைச் சேர்ந்த 75,570 பேர் பாதிப்பு

யாழில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 23,304 குடும்பங்களைச் சேர்ந்த 75,570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அம்மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என் சூரியராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008 ம் ஆண்டு நிஷா புயலினால் ஏற்பட்ட தாக்கத்தின் பின்னர் தற்போது வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக யாழ்.மாவட்டத்தில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த சில தினங்களாக ஏற்பட்ட தாழமுக்கத்தினை தொடர்ந்து ஏற்பட்ட புரவி புயல் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் யாழ்.மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.

புரெவி சூறாவளி தாக்கம் மற்றும் தொடர்ச்சியான சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை23,304 குடும்பங்களைச் சேர்ந்த 75,570 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்

மேலும், குறித்த சீரற்ற காலநிலையின் தாக்கத்தின்காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதோடு, ஆறுபேர் காயம் அடைந்துள்ளார்கள்

சீரற்ற காலநிலையின் காரணமாக இதுவரை 94 வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. 3024 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. சிறு மற்றும் மத்திய முயற்சியாளர்கள் 776 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 27 வகையான உட்கட்டமைப்பு வசதிகளும் சேதமடைந்துள்ளன.

தற்போது 21 இடைத்தங்கல் முகாம்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts