Ad Widget

சிவில் சமூகத்தை சேர்ந்தவரை ஆளுநராக நியமிக்கவும்: வட மாகாண சபையில் பிரேரணை

northசிவில் சமூகத்தை சார்ந்தவரும் மனித உரிமைகள் தொடர்பான பூரண அறிவுடையவருமான ஒருவரே வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

வட மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் நடைபெற்று வருகின்றது. இதன்போதே ஜனாதிபதிக்கு முன்வைக்கப்பட்டிருந்த பிரேரணை சபை உறுப்பினர்களினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

சிவில் சமூகத்தைச் சேர்ந்த வட மாகாண தமிழர் ஒருவரே ஆளுநராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்ற பிரேரணையொன்றை மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சபையில் முன்வைத்தார்.

இந்த பிரேரணையை ஆறுமுகம் கந்தையா சர்வேஸ்வரன் வழிமொழிந்தார். எனினும் இந்த பிரேரணையில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு எதிர்க்கட்சி உறுப்பினர் செனவிரத்ன எ.டி. தர்மபாலா வேண்டுகோள் விடுத்தார்.

இதனையடுத்து, குறித்த பிரேரணையிலுள்ள “தமிழர்” என்ற சொல்லை நீக்குமாறு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழர் என்ற சொல் வேண்டாம் என்றால் வட மாகாணத்தை சேர்ந்த ஒருவர் என்பதையும் நீக்க வேண்டும் என மாகாண சபை உறுப்பினர் கனகரத்தினம் விந்தன தெரிவித்தார்.

இறுதியாக சிவில் சமூகத்தை சார்ந்தவரும் மனித உரிமைகள் தொடர்பான பூரண அறிவுடையவருமான ஒருவரே வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என்ற பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டது. இது அனைத்து உறுப்பினர்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து ஏகமனதாக சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் வடக்கில் இராணுவத்தை அகற்றி சிவில் சமூகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற பிரேரணையும் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் முன்வைக்கப்பட்டது. இதனை மாகாண சபை உறுப்பினர் கனகரத்தினம் விந்தன் வழிமொழிந்தார். இப்பிரேரணையும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

ஆரம்பமாகியது வட மாகாண சபையின் மூன்றாவது அமர்வு

Related Posts