காரைநகர் சிறுமி வன்புணர்வு தொடர்பிலான வழக்கு மீண்டும் இம்மாதம் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காரைநகரில் சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று யாழ். சிறுவர் நீதிமன்றத்தில் நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி திருநாவுக்கரவுக்கரசு முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
விசாரணைக்கு சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட கடற்படை சிப்பாய்கள் 7 பேரும் ஆஜராகி இருந்த நிலையில் சிறுமியின் சார்பில் எவரும் ஆஜராகி இருக்கவில்லை.
கடந்த வழக்கு விசாரணையில் நீதிபதி க.ஜீவராணி குறித்த சிறுமி சம்பவ நாட்களில் பயன்படுத்திய ஆடைகள் என்பனவற்றை மன்றில் சமர்ப்பிக்குமாறு ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று ஊர்காவற்றுறை பொலிஸாரினால் சிறுமியின் ஆடைகள் மன்றில் ஒப்படைக்கப்பட்டன.
அதனையடுத்து குறித்த ஆடைகளை பாகுப்பாய்வு செய்வதற்கு நீதிபதி ஜீவராணி அனுப்பி வைப்பார் என்றும் வழக்கு எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாகவும் உத்தரவிட்டார்.