Ad Widget

சிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் – தந்தை தீக்குளிப்பு

கொடிகாமம் பிரதேசத்தில் 16 வயது சிறுமியுடன் சேர்ந்து வாழ்ந்த அதே இடத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடிகாமம் கச்சாய் வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனும், 16 வயதுடைய சிறுமியும் காணாமற் போனதையடுத்து சிறுமியின் பெற்றோர்களால் கொடிகாமம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த இளைஞனும் சிறுமியும் சேர்ந்து வாழ்வதைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்து விசாரணைக்குட்படுத்தினர்.

இதனால் சிறுமியின் தந்தை தீக்குளித்துள்ள நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த இருவரையும் பொலிஸார் நேற்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, குறித்த இளைஞனை எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட பதில் நீதிவான் செ.கணபதிப்பிளை, சிறுமியை கைதடியிலுள்ள இரட்சணிய சேனை இல்லத்தில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இருவரையும் சட்ட வைத்திய பரிசோதனைக்குட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.

Related Posts