Ad Widget

சிறுபான்மை மக்களின் நியாயபூர்வமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்! – சம்பந்தன்

வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழும் சிறுபான்மையின மக்களின் நியாய பூர்வமான நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதில் அர்த்தபுஷ்டியான தாக்கத்தை ஏற்படுத்துவதாக புதிய தேர்தல் முறைமை அமைய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் வலியுறுத்தினார்.

மேலும், யாழ்.மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்னும் 20வருடங்களுக்கு 9 ஐ விடவும் குறைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான விசேட ஏற்பாடுடையதாகவும் புதிய தேர்தல் முறைமை இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர், மேலும் தெரிவிக்கையில் :-

“தேர்தலொன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் முறைமை மாற்றம் குறித்து பேசுவது துரதிர்ஷ்டவசமானது. தேர்தல் முறைமை மாற்றம் என்பது அரசமைப்பு மறுசீர்திருத்தமாகவே கருதப்படும். அனைத்து மக்களும் சமமானவர்கள் என்ற ஆளுகையைப் பகிர்ந்தளிப்பதாக இது அமைய வேண்டும். இதற்கான உரிய தேர்தல் முறைமை மறுசீரமைப்பு குறித்து தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு பிரஜையும் தமது வாக்கிற்குப் பெறுமதி இருக்கிறது என்று உணர வேண்டும். அந்த உறுதிப்பாட்டில் வாக்களிக்க வேண்டும். ஒரு வாக்கு தமது எதிர்காலம், நாட்டின் எதிர்காலம் என்பவற்றில் தாக்கம் செலுத்தும் என்பதைக் கருதவேண்டும்.

நாட்டின் இரு பிரதான கட்சிகளாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக்கட்சிகள் உள்ளன. 70 சதவீத சிங்கள மக்கள் இருக்கின்றனர். இவற்றுக்கு 70 சதவீதத்துக்கும் அதிகமான பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படும். ஆனால் வடக்கு கிழக்கு, மலையகம், மேற்கு என சிறுபான்மை மக்கள் பிரிந்து வாழ்கின்றனர். அவர்கள் தமது வாக்கை உறுதிப்படுத்தவேண்டும். பிரதிநிதித்துவமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். தமிழ், முஸ்லிம், இந்திய வம்சாவளித் தமிழர்கள் என தமிழ் மக்கள் பரவி வாழ்கின்றனர். இவர்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டியது முக்கியமானதாகும். வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழும் மக்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். சிறுபான்மை மக்கள் கூட்டாக வாக்களித்து தமது பிரதிநிதித்துவத்தை உறுதி செய்துகொள்ள வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.

அத்துடன் அவர்களின் வாக்குக்கு பெறுமதி வழங்கும் வகையிலும், அந்தப் பெறுமதியை அவர்கள் உணரும் வகையிலும் புதிய தேர்தல் முறைமை அமைய வேண்டும். போர் காரணமாக வடக்கிலுள்ள பலர் இடம்பெயர்ந்தும் வெளிநாடுகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் வாக்களர்களாகப் பதிவு செய்யப்படவில்லை. இதில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் நிலை மிகவும் மேசமாக உள்ளது. எமக்கு தற்போது 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். இந்தநிலையில் இன்னும் 20 வருடங்களுக்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற எண்ணிக்கை 9ஐ விடவும் குறையாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான விசேட ஏற்பாடுகளை புதிய தேர்தல் முறைமையில் உள்ளடக்கப்பட வேண்டும்.

எனது இந்தக் கோரிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும் தேர்தல் மறுசீரமைப்பு குழுவின் தலைவர் தினேஷ் குணவர்த்தன, அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் இடதுசாரித் தலைவர்கள் என அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே, யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஆசனக்குறைப்பு ஏற்பட்டு விடக்கூடாது. நாம் முன்வைத்துள்ள இந்த விடயத்துடன் 20 ஆவது திருத்தச் சட்டவரைவு நிறைவேற்றப்பட வேண்டும்” – என்றார்.

Related Posts