Ad Widget

சிறுபராய திருமணங்களுக்கு முற்றுப்புள்ளி?

நாட்டில் அதிகரித்து வரும் சிறுவயது திருமணங்களையும் சிறுவர் துஸ்பிரயோகங்களையும் கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி ரோஸி சேனாநாயக்கா தெரிவித்தார்.

வடக்கில் இடம்பெறும் சிறுவர் வன்புணர்வுகள் மற்றும் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘சிறுவயது திருமணங்கள் நாட்டில் அதிகரித்துள்ளன. 15 – 18 வயதுக்குட்பட்ட பெண்களின் திருமண சதவீதம் 12ஆக காணப்படுகிறது. 15 வயதுக்குட்பட்ட பெண்களின் திருமணம், நாடளாவிய ரீதியில் 2 சதவீதமாக காணப்படுகிறது. இதில் பெரும் எண்ணிக்கையானவர்கள் வடக்கிலேயே இருக்கின்றனர்’ என்றார்.

‘கடந்தகால யுத்த சூழ்நிலையில், தம் பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக சிறுவயது திருமணங்களை பெற்றோர் ஊக்குவித்தனர். ஆனால், இப்போதும் அது தொடர்கிறது. இந்நிலைமையினை மாற்றுவதற்காக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் உதவியினை நாடியிருக்கிறோம். எதிர்வரும் காலங்களில் இவ்வாறான நிலை ஏற்படாது பாதுகாப்பதே எமது இலக்காகும்’ என்றார்.

‘இதேவேளை, வித்தியாவின் படுகொலையினை தயவுசெய்து அரசியலாக்காதீர்கள். அவள் வடக்கின் குழந்தை மட்டுமல்ல, நமது நாட்டின் குழந்தை. நம் குழந்தையை சீரழித்தவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இவ்வாறான வன்புணர்வுகள் இடம்பெறாது தடுக்க வேண்டும். அதனைவிடுத்து, சாவில் அரசியல் தேடும் கீழ்த்தரமான நடவடிக்கையினை அரசியல் பிரமுகர்கள் கைவிடவேண்டும்’ எனவும் ரோஸி சேனாநாயக்க மேலும் கோரினார்.

Related Posts