Ad Widget

சிப்பாயை கொலை, சக சிப்பாய்க்கு 2 வருட கடூழிய சிறை

judgement_court_pinaiஇராணுவ சிப்பாயை ஒருவரை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட சக இராணுவ சிப்பாய்க்கு இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனையை யாழ். மேல் நீதிமன்றம் விதித்துள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு யூலை மாதம் அளவெட்டி பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றிலேயே இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் இராணுவ சிப்பாய் ரத்னாயக்க முதயான்சலாகே சந்தன லக்மல் ஜெயதிச என்பவரே கொலைச்செய்யப்பட்டுள்ளார்.

திறப்பனை வண்ணமடு பகுதியைச் சேர்ந்த அபேசிங்க ஆராய்ச்சிகே தமித் ரூவான் திஸாநாயக்க என்ற இராணுவ வீரரரே கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, தெல்லிப்பழை பொலிஸாரினால் மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதன் பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் யாழ். மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
யாழ். மேல் நீதிமன்றில் யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் முன்னிலையில் அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

விசாரணையின் போது, குறித்த எதிரியின் மீது கொலையாகாத மரணம் விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது, எதிரி குற்றத்தினை ஒப்புக் கொண்டதற்கு இணங்க 5வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடுழிய சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.

அத்துடன், 5 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிட்டதுடன், தண்டப்பணம் செலுத்த தவறின் 1 மாத கால சாதாரண சிறைத்தண்டனைக்கும் உத்தரவிடப்பட்டது.

அதுமட்டுமன்றி இறந்தவருக்கு 1 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டது.

இறந்தவர் திருமணமாகியிருந்தால் மனைவியிடமும், அவர் திருமணமாகாதவராயின் தாய் அல்லது தந்தையிடம் அந்த பணத்தை வழங்க வேண்டுமென்றும், நட்டஈடு தொகையை வழங்காவிட்டால் 6 மாதம் சாதாரண சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டுமென்றும், யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

Related Posts