Ad Widget

சாவகச்சேரியில் இடம்பெற்ற கொடூர கொலை!!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை புத்தூர் சந்திப்பகுதியில் வைத்து நேற்று மாலை ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி தெரிவித்துள்ளனர்.

குறித்த இடத்தில் வசிக்கின்ற 20 வயதான இளைஞர் மனநல சிகிச்சைகளுக்காக கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் அந்த இளைஞர் வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடி, தான் வசித்த புத்தூர் சந்தியில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார்.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கத்தை சேர்ந்த 48 வயது மதிக்கத்தக்க நாகராஜா என்பவர் குறித்த இளைஞரை பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞர் தப்பியோடியதால் நோயாளர் நலம்புரி பராமரிப்பாளர் நாகராஜா, இளைஞரை மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக இளைஞரின் உறவினர் ஒருவருடன் இளைஞரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன்போது புகையிரத வீதியில் அமர்ந்திருந்த குறித்த இளைஞரோடு நலன்புரிச் சங்க பராமரிப்பாளர் உரையாடியுள்ளார். சிறிது நேரத்திற்கு பின்னர் இளைஞருடன் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதன்போது இளைஞரின் உறவினர் முச்சக்கரவண்டியோடு வீதியோரத்தில் காத்திருந்துள்ளார். இந்நிலையில் வீட்டுக்குள் இருந்து இளைஞர் மட்டும் வெளியே வந்து மீண்டும் புகையிரத வீதியில் அமர்ந்திருந்துள்ளார்.

இதனால் வீட்டுக்குள் சென்ற நோயாளர் பராமரிப்பாளரை காணாத இளைஞரின் உறவினர் அவருக்கு நீண்ட நேரமாக தொலைபேசியில் அழைத்தும் பதில் இல்லாததால் புகையிரத வீதியில் அமர்ந்திருந்த இளைஞரிடம் சென்றுள்ளார்.

இதன்போது அவரை வீட்டு முற்றத்தில் வைத்து அலவாங்கால் குத்தி கொலை செய்துவிட்டேன் என இளைஞர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வீட்டு முற்றத்திற்கு சென்று பார்த்தபோது குறித்த நபர் முகத்தில் பலத்த காயங்களோடு இறந்து கிடந்துள்ளார்.

உடனடியாக சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இளைஞரை கைது செய்ததுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts