Ad Widget

சாகும் வரையிலான உண்ணாவிரதம் : ஜனாதிபதிக்கு வடக்கு முதல்வர் கடிதம்

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள தமிழ் கைதிகளின் பிரச்சினையை மனிதாபிமானத்துடன் அணுகி, அவர்களுடைய பிரச்சினைக்குக் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தீர்வு காணப்படும் என்ற உத்தரவாதத்தை, வழங்கி அந்த உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

ஜனாதிபதி அவர்களே, சிறைச்சாலைகளில் உள்ள தமிழ்க் கைதிகள், தங்களை நீண்ட காலமாகத் தடுத்து வைத்திருப்பதை வெளிப்படுத்தும் முகமாக இன்று உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றார்கள்.

கடந்த காலங்களில் இடம்பெற்றதைப்போன்று, இந்த உண்ணாவிரதத்தை சிறைச்சாலை அதிகாரிகள் கடுமையான முறையில் கையாளக்கூடும் என்று அஞ்சப்படுகின்றது. விசாரணைகளின்றி ஆண்டுகள் கணக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள துரதிஸ்டவசமான மனிதர்களின் இந்த பிரச்சினையானது, ஒரு மனிதாபிமான விடயமாகும். எனவே, இரக்கத்துடனும்இ அனுதாபத்துடனும் இந்த விடயம் அணுகப்படவேண்டும். ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் இந்தப் பிரச்சினைக்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்

என உறுதியளிக்கப்பட்டால், அவர்கள் திருப்தியடைவார்கள் என்று நான் நம்புகிறேன்.இது விடயத்தில் பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பதைத் தங்களின் உடனடி கவனத்திற்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

முதலாவதாக என்ன காரணத்திற்காக இவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை அவர்கள் சம்பந்தப்பட்ட குற்றச் செயல்களை வகைப்படுத்தி பட்டியல் ஒன்றைத் தயாரிக்கலாம். இதனை ஒரு வார காலப்பகுதியில் செய்து முடிக்கலாம்.

இரண்டாவதாக தகவல் தெரிவிக்கவில்லை என்பது போன்ற சிறிய குற்றங்கள் செய்தார்கள் என்பதற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கலாம். அல்லது அவர்களை உடனடியாகப் பிணையில் செல்ல அனுமதிக்கலாம்.

மூன்றாவதாக வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் உள்ள, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வருவதாக சந்தேகிக்கப்படுகின்ற அனைத்து கைதிகளுக்கும், உரிய வகையில் பிணை வழங்கலாம். நீண்ட காலமாக வழக்கு தாக்கல் செய்யாமல், வெறும் சந்தேகத்தின் அடிப்படையில், ஆட்களைத் தடுத்து வைத்திருப்பது என்பது அவர்களுடைய மனித உரிமைகளை மீறுகின்ற செயலாகும்.

நான்காவதாக, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் பொலிசாருக்கும் குறிப்பிட்ட காலப்பகுதியில் குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்யமாறு அவசர ஆணையிடலாம். நீண்ட காலமாக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதனால், நியாயமான முறையில் ஒரு மாதத்திலோ அல்லது இரண்டு மாதங்களிலோ அவர்களுக்கான குற்றப் பத்திரங்களைத் தாக்கல் செய்யலாம்.

ஐந்தாவதாக, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகின்ற ஒப்புதல் வாக்குமூலம் என்ற ஒரேயொரு சாட்சியத்தின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பவர்கள் மற்றும் அவ்வாறான வழக்கு நிலுவையில் உள்ளவர்களுக்குப் பிணை வழங்கலாம். இவ்வாறான ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டிருப்பதை, சர்வதேச சட்டங்களும், சர்வதேச மற்றம் உள்ளுர் வழக்கறிஞர்களும், காலத்துக்குக் காலம் மீண்டும் மீண்டும் முகச் சுழிப்புடன் நோக்கியிருக்கின்றனர்.

ஆறாவதாக, தேவையான ஏனைய சாட்சியங்களுடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பவர்களுக்குப் போதுமான சட்ட உதவிகளை வழங்கி, முன்னுரிமை அடிப்படையில் அவர்களுடைய வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வரலாம். இதற்கு காலக் கெடு ஒன்ற நிர்ணயிப்பது பொருத்தமானதாக இருக்கும்.

ஏழாவதாக, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுடைய வழக்குகளை நாளாந்த அடிப்படையில் விசாரணை செய்யுமாறு நீதிச் சேவை ஆணைக்குழுவின் ஊடாக நீதிபதிகளுக்குப் பணிப்புரை விடுக்கலாம். அதிகமாகத் தாதமதப்படுத்தப்படுகின்ற வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்குப் பிணை வழங்குவதற்கான தெரிவை வழங்கலாம்.

தமிழ் சிறைக்கைதிகளின் உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அவர்களுடைய பிரச்சினை இரக்கத்துடனும், அனுதாபத்துடனும் அணுகப்படுகின்றது என்ற உத்தரவாதத்தை வழங்குவதற்காக உரிய அவசர நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன் என்றுள்ளது.

Related Posts