இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் மனித உரிமைகள் மீறல் குறித்த ஐ.நாவின் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேனவை நான் வாழ்த்துகிறேன். நான் அந்த நாட்டிற்கு விஜயம் செய்த வேளை அந்த நாட்டில் பெரும் சக்தி உள்ளதை உணர்ந்தேன்.
அவர் அந்த சக்தியை பயன்படுத்தி ஐக்கியப்பட்ட வளமான – ஸ்திரத்தன்மை வாய்ந்த நாட்டை தலைமை தாங்குவதற்கு நான் வாழ்த்துகிறேன்.
அமைதியான, ஜனநாயகத் தேர்தல் என்பது அதில் தொடர்புபட்டுள்ள அனைத்து இலங்கையர்களினதும் பெருமைக்குரிய விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மக்களின் முடிவை ஏற்று அமைதியான ஆட்சி மாற்றத்திற்கு இணங்கியமையையும் நான் வரவேற்கிறேன்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் குறித்து ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கு ஒத்துழைக்குமாறு புதிய ஜனாதிபதியை நான் கேட்டுக்கொள்கிறேன்.
இதன் மூலம் கடந்த கால விவகாரங்களுக்கு தீர்வை கண்ட பின்னர் நாடு முன்னோக்கி நகரும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.