Ad Widget

சர்வதேச மத்தியஸ்தம் இல்லாத உள்நாட்டு விசாரணையை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது என்கிறார் சுமந்திரன்!

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் மேற்கொண்ட விசாரணை அறிக்கையை எதிர்வரும் மார்ச் மாத அமர்வில் சமர்ப்பிக்காது பிற்போடக்கோரும் இலங்கை அரசு, அந்த அறிக்கையை வெளிவராமல் தடுத்து, உள்நாட்டு விசாரணையை முன்னெடுப்பதை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

sumantheran

இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளவை வருமாறு:-

இலங்கை மீதான விசாரணை அறிக்கையை ஐ.நா. வெளியிட்டதன் பின்னர் இடம்பெறும் தொடர் நடவடிக்கையே மிக முக்கியமானதாகும்.

அந்தத் தொடர் நடவடிக்கையை மனித உரிமைகள் கவுன்ஸில் இறுக்கமாக மேற்கொள்ள வேண்டும். “இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச விசாரணை குறித்த அறிக்கை வெளிவர வேண்டும்.

இந்த அறிக்கைதான் உண்மையைக் கண்டறிவதற்கான அத்திபாரமாக இருக்கும். உண்மையைக் கண்டறியாமல் அல்லது உண்மையைக் கண்டறிந்து அதை மூடிமறைத்து நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.

தற்போது உள்ளூர் விசாரணையை நடத்துவதற்கு அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப் பெற இருப்பதாக அரசு கூறுகின்றது. உள்ளூர் விசாரணைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் மேற்பார்வையின் கீழ் உள்ளக விசாரணை இடம்பெறுவதற்கு உத்தரவாதம் கொடுத்தால், அதை நாம் வரவேற்போம்.

ஆனால், அறிக்கையை வரவிடாமல் தடுத்து, உள்நாட்டு விசாரணையை முன்னெடுப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஐ.நா. விசாரணையின்போது விசாரணையாளர்கள் நாட்டுக்குள் வர அனுமதிக்கப்படவில்லை. அவர்களுடைய காலத்தை நீடித்து நாட்டுக்குள் வந்து விசாரணையை நடத்த இலங்கை அரசு இடமளித்தால், காலத்தை நீடிக்க நாம் இணக்கம் தெரிவிக்கலாம்.

எனவே, விசாரணை தொடர்பில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு இலங்கை அரசு எந்தவிதமான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருக்கின்றது என்று எமக்குத் தெரியவேண்டும். அது தெரிந்தால்தான் அதை ஆதரிக்கலாமா? இல்லையா என்று முடிவு செய்யலாம். – என்றார்.

Related Posts