Ad Widget

சர்வதேச மத்தியஸ்தத்துடன் நிரந்தர தீர்வு வேண்டும் – எஸ்.சிறிதரன்

70 ஆண்டுகளுக்கு மேலாக காணப்படுகின்ற இலங்கை இனப்பிரச்சனைக்கு, சர்வதேச மத்தியஸ்தத்துடன் ஒரு தீர்வு காணப்பட்டு தமிழர்கள் வடக்கு – கிழக்கில் நிம்மதியாக வாழ்கின்ற நிலை உருவாகுவதற்கு பிரித்தானிய உள்ளிட்ட நாடுகள் முன்வரவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

srithan

இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் லாரா டேவிஸ் மற்றும் சிறிதரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு சிறிதரனின் வாசஸ்தலத்தில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது. இந்தச் சந்திப்பு குறித்த சிறிதரன் கருத்து கூறுகையிலே மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது,

‘கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின் வடக்கு, கிழக்கு தமிழர் வாழும் பகுதிகளில் உள்ள நிலைமைகள் தொடர்பாக அவர் என்னிடம் வினவினார். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்ததாக தெரியவில்லை. மெல்ல மெல்ல மக்கள் இந்த அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கையை இழந்தே வருகின்றனர்.இராணுவ பிரசன்னங்கள், இராணு முகாம்கள், ரோந்துகள் என்பவற்றில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இப்பொழுதும் கைதுகள், விசாரணைக்கு அழைத்தல் என்பனவும் தொடர்கின்றன. மீள்குடியேற்றம் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. அறிவிப்பு நிலையில் இருக்கின்ற பலவிடயங்கள் இன்னும் செயற்படுத்தபடவில்லை.

தொழில் வாய்ப்பு இன்மையால் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மிகவும் கஸ்ரப்படுகின்றார்கள். அவர்களுக்கு தொழில் வழங்கக்கூடிய பண்ணைகள், தொழிற்சாலைகள் இன்னும் இராணுவ பிடிக்குள்ளேயே இருக்கின்றது. அல்லது இயங்க வைக்கப்படவில்லை.

போர் காரணமாக தாம் படித்த படிப்புக்கு உரிய வயதில் வேலை பெறமுடியாத நிலையில் தற்பொழுது கோரப்படும் விண்ணப்பங்களுக்கு வயது சென்றமையால் வேலைக்கு விண்ணப்பிக் முடியாமல் மிகவும் மனப்பாதிப்புக்கு ஏராளம் பேர் உள்ளாகியுள்ளனர் என்று அவர்களுக்கு கூறினேன்.

ஐ.நாவில் முன்னெடுக்கப்படும் போர்க்குற்ற விசாரணைக்கு குந்தகம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சமும் மக்களுக்கு இருக்கின்றது என்று கூறியிருந்தேன்’ என்று சிறிதரன் தெரிவித்தார்.

Related Posts