Ad Widget

சர்வதேச நெருக்கடியிலிருந்து இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றச் செயற்படுகிறது கூட்டமைப்பு – கஜேந்திரன்

சர்வதேச ரீதியான நெருக்கடியில் இருந்து இலங்கை அரசாங்கத்தினை முழுமையாக பாதுகாக்கும் வகையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டுவருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளருமான எஸ்.கஜேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் கோவிந்தன் வீதியில் சனிக்கிழமை அகில இலங்கை தமிழ்காங்கிரசின் அலுவலகத்தினை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கிழக்கு மாகாணத்தில் இன்னும் சிறிது காலத்தில் தமிழர்கள் குரலற்றவர்களாக மாற்றப்படுவார்கள்.எமது உரிமைகள் அங்கீகரிக்கப்படாவிட்டால் இந்த நிலை இன்னும் சில காலத்தில் வடக்கிலும் உருவாக்கப்படும்.

இராணுவத்தில் 18 பிரிவுகளில் 16 பிரிவுகள் வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என இன்று கூட்டமைப்பினேரே கூறிவருகின்றனர்,.குறித்த ஆயுதப்படைகளின் உறவினர்களின் பதிவுகளை வடக்கிலே செய்யுமாறு சிங்கள் அரசாங்கம் கூறுமானால் அதனை யாரும் தடுக்கமுடியாத நிலையே ஏற்படும்.அதனால் சனத்தொகையில் சடுதியான மாற்றம் ஏற்படும்.அதன் ஊடாக சிங்கள மயமாக்கல் நடாத்தப்படும்.இதற்கு தமிழ் தேசிய கூட்;டமைப்பு பூரண ஒத்துழைப்பினை வழங்கிக்கொண்டேயுள்ளது.

2016ஆம் ஆண்டிலே இந்தப் பிரச்சனைக்கு முடிவு கட்டப்போவதாக சம்பந்தன் ஐயா கூறியிருக்கின்றார். அவருடைய முடிவு என்பது தமிழர்களுக்கு சாவு மணியாகும். தமிழ்த்தேசியவாதம் என்ற எல்லா நிலைப்பாடுகளையும் கைவிட்டு சிங்களத்திற்குள் இரண்டறக் கலப்பதே அவருடைய நிலைப்பாடாகும். கிழக்கை அப்படிச் செய்துவிட்டார். தமிழ்த் தேசிய வாதத்தை மக்களுக்கு முன்னால் தேர்தல் மேடைகளில் பேசிவிட்டு இன்று அதிகாரமில்லாத கிழக்கு மாகாணசபைக்குள் தன்னுடைய உறுப்பினர்களை அரசுடன் சேர்த்து பங்காளிகளாக்கிவிட்டார். தமிழர்களுக்கு இங்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றது. அதைப்பற்றி பேசுவதற்கு தமிழ் வேட்பாளர்கள் யாரும் தயாராக இல்லை. வடக்கிலும் அவ்வாறானதொரு காரியத்தை செய்துவிட்டால் அவருடைய ஆத்மா நிம்மதியடையும். அதுவே அவர் தமிழ் மக்களுக்காக வைத்திருக்கின்ற தீர்வாகும்.

2012ஆம் ஆண்டிலே ஐ.நா சபையில் இலங்கை தொடர்பாக தீர்மானமொன்று வெளியிடப்பட்டது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என்பதே அதுவாகும். போர் செய்த ராஜபக்ச அரசு சர்வதேச நெருக்கடிகளிலிருந்து தப்பிக்கொள்வதற்காக கண்துடைப்பிற்கு நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்கியது. அதற்கு அவரே நிபுணர்களையும் நியமித்தார். அவர்களை அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வாக்குமூலங்களை பெற்றார்கள். அதன்பின் அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டார்கள். அந்த அறிக்கையென்பது தமிழர்களுக்கு ஒரு தீர்வினை தராது என்பது சாதாரண மக்களுக்குகூட தெரியும். ஏனேன்றால் இனஅழிப்பினை செய்தது ராஜபக்ச அரசாகும். அந்த அரசே தான் செய்த குற்றங்களையெல்லாம் ஆராய்ந்து தமிழர்களுக்கு ஒரு தீர்வினை கொடுக்கப்போகின்றது என்பதை நாங்கள் நம்பினால் நாங்கள் படுமுட்டாள்கள் ஆவோம்.

அந்த நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாக சர்வதேச அமைப்புகள் கடும் விமர்சனத்தை முன்வைத்திருந்தன. சம்பந்தன் ஐயா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புகூட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிராகரித்து 105பக்கத்தினை கொண்ட புத்தகத்தினூடாக தங்கள் அறிக்கையை வெளியிட்டிருந்தார்கள்.

அதன் பின்னர் அவர்கள் அமெரிக்கா சென்றபோது அங்கு அவர்களுக்கு பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. அந்த வரவேற்பில் அவர்கள் மயங்கினார்கள். அங்கு அவர்களிடம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவேண்டுமென ஐ.நா கோரவேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. சம்பந்தன் ஐயா இங்கு வந்ததும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் உரிய முறையில் நிறைவேற்றப்பட்டால் தமிழர்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படும் என்று தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதி ஐ.நா.பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் 47 நாடுகளுக்கும் அனுப்பினார். இவர்களுடைய கோரிக்கையின் அடிப்படையில் அந்த தீர்மானம் ஐ.நா பேரவையில் கொண்டுவரப்பட்டது. அந்த தீர்மானத்தில் மிக ஆபத்தானதொரு விடயம் இருக்கின்றது. இந்த நாடு இனரீதியாக மொழி ரீதியாக வேறுபட்டு காணப்படுவதே இனப்பிரச்சனைக்கு காரணம் 2020ஆம் ஆண்டளவில் இலங்கை இனரீதியாக மொழி ரீதியாக வேறுபட்டு காணப்படக்கூடாது அதற்கேற்றவகையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது.

வடக்கு கிழக்கு தான் இலங்கையின் 75வீத சிங்களவர் வாழும் பகுதிகளிலிருந்து வேறுபட்டிருக்கின்றது. ஆகவே அது மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பது அந்த பரிந்துரையாகும். அதற்குரிய வேலைகளை அவர்கள் ஏற்கனவே மட்டக்களப்பு,திருகோணமலை,அம்பாறை மாவட்டங்களில் கணிசமான அளவு செய்துவிட்டார்கள். வடக்கு மட்டுமே எஞ்சியிருக்கின்றது. வடக்கிலும் அதை செய்துவிட்டால் இனப்பிரச்சனை இருக்காது, இதன் உள்ளடக்கம் தான் இந்த பரிந்துரையாகும்.

இலங்கை அரசாங்கத்தோடு சேர்ந்து தமிழர்களை அழிப்பதற்கு துணை நின்ற டக்ளஸ்,பிள்ளையான்,கருணா போன்றவர்கள் மட்டுமல்ல. இதை அமுல்படுத்தினால் தமிழர்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படும் என்று ஐ.நாவிற்கு கடிதம் எழுதியவர்களும் தான். விடுதலைப்புலிகள் உருவாக்கியதாக நாங்கள் கருதும் இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் இந்த துரோகத்தை செய்தது.

ஆட்சி மாற்றத்தினால் தமிழர்களுக்கு எந்த நன்மையும் வரப்போவதில்லை. தமிழர்களை விட இந்தியாவிற்கே ஆட்சி மாற்றத் தேவை அதிகமாக இருக்கின்றது நாங்கள் இந்தியாவுடன் ஒரு பேரம் பேசலை செய்வோம் அதாவது சிங்கள குடியேற்றம்,பௌத்தமயமாக்கல்நிறுத்தப்படவேண்டும்,திட்டமிட்ட ஏனைய குடியேற்றங்கள் நிறுத்தப்படவேண்டும்,அரசியல் கைதிகள் விடுதலைசெய்யப்படவேண்டும்,கட்டமைப்பு உருவாக்கப்பட்டு மேற்கு நாடுகள் நேரடியாக உதவவேண்டும் போன்ற முன்வைப்போம் என்ற அடிப்படையில் நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம்.ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவினை வழங்கியது.

ராஜபக்ஸவை ஆட்சியில் இருந்து இறக்கினால் தான் போர்க்குற்ற விசாரணை நடத்தலாம் என்றார்கள். ஆனால் ஆட்சி மாற்றம் என்ற பெயரில் மைத்திரியை கொண்டுவந்து சர்வதேச விசாரணையை உள்ளக விசாரணையாக சம்பந்தரும் சுமந்திரனும் கொண்டுவந்தார்கள். தமிழர்களின் முழு ஆதரவுடன் சர்வதேச விசாரணை கைவிடப்பட்டது. தற்போது மகிந்த மீண்டும் பாராளுமன்ற தேர்தலுக்குள் வந்துவிட்டார். நாளை அவர் பிரதமர் ஆகலாம். அவர் அப்போது மைத்திரியுடன் இணைந்து தமிழர்களுக்கு எதிராக செயற்படும் நிலையும் உருவாகலாம். மைத்திரிபாலசிறிசேனவே மகிந்தவுக்கு வேட்பாளர் அந்தஸ்தை வழங்கியுள்ளார். இந்த மைத்திரியுடனேயே சம்பந்தன் அவர்களும் பங்காளியாகவுள்ளார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்பது இன்று தமிழர்களுக்கு இருக்கின்ற ஒரேயொரு கட்சி. குமார் பொன்னம்பலம் கொழும்பில் இருந்துகொண்டு தமிழ் தேசிய போராட்டத்தினை ஆதரித்ததன் காரணமாக சந்திரிகா அரசங்கத்தினால் படுகொலைசெய்யப்பட்டார். அவர்படுகொலைசெய்யப்படுவதற்கு காரணமாக இருந்தவர்கள் தமிழர் விடுதலைக்கூட்டணியினராகும்.

இவர்கள் அன்று அரசாங்கத்தினை ஆதரித்துக்கொண்டு குண்டு துளைக்காத வாகனத்திலே சென்றுகொண்டு அதிகாரப்பகிர்வினை ஏற்றுக்கொள்ள தயார் என்று சொல்லிக்கொண்டிருந்தபோது,ஒரேயொரு மனிதர் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிக்கவேண்டும் என்ற உறுதியை எடுக்கின்றார். அதன் காரணத்தினால் அவர் கொல்லப்படுகின்றார்.அவ்வாறானவர்கள் இன்று பேசப்படாமல் 60 ம் ஆண்டுகளில் ஜி.ஜி.பொன்னம்பலம் அமைச்சு பொறுப்புகளை எடுத்தது தொடர்பில் இன்று பேசிக்கொண்டிருக்கின்றனர்.

எமது சொந்த மக்கள் செய்த போராட்டத்தினை போர்க்குற்றம் செய்ததாக காட்டிக்கொடுத்துள்ளார்கள் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர். இதுவரையில் ஒரு சிங்கள பொதுமகன் கூட சொல்லவில்லை இராணுவம் போக்குற்றம் செய்துள்ளது விசாரணைசெய்யவேண்டும் என்று.ஆனால் கடந்த 30வருடமாக எமது உரிமைக்காக போராடிய எமது விடுதலை இயக்கத்தினை போர்க்குற்றம் தொடர்பில் விசாரணைசெய்யவேண்டும் என சம்பந்தன் ஐயாவும் சுமந்திரனும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிட்டு மக்கள் ஆணையை பெற்றுள்ளனர்.இது வரலாற்று துரோகமாகும்.

இலங்கையின் சரித்திரத்தில் ஒற்றையாட்சி அங்கீகரிக்கப்பட்டது 2013 ம் ஆண்டு மாகாணசபை தேர்தல் விஞ்ஞாபனத்திலாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பணியானது இலங்கை அரசாங்கத்தினை சர்வதேச நெருக்கடியில் இருந்து முழுமையாக விடுவிப்பதாகும்.

Related Posts