வடக்கில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், யாழில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இதுகுறித்து வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியை வளர்ப்பதற்காகவா வடக்கு மக்களுக்கு பொருத்து வீட்டுத் திட்டத்தினை திணிக்கின்றீர்கள் என இதன்போது ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் ராஜாங்க அமைச்சருமான விஜயகலாவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கேட்க, கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பும் கட்சியை வளர்ப்பதற்கே பார்க்கின்றனர் என விஜயகலா குறிப்பிட்டார்.
இதனையடுத்து ராஜாங்க அமைச்சர் விஜயகலாவிற்கும் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
அபிவிருத்தி கூட்டத்தில் கட்சியை பற்றி கதைக்க வேண்டாம் என இதன்போது தெரிவித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், மக்களின் பிரச்சினைகளுக்கு அதி முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்றும் மக்களை மீண்டும் மீண்டும் படுகுழியில் தள்ளுவதற்கு தயாராக இல்லை என்றும் குறிப்பிட்டார்.
எவ்வாறெனினும், பொருத்து வீட்டுத் திட்டத்தினைப் பற்றி அதற்குரிய அமைச்சரிடமே கலந்துரையாட வேண்டுமென தெரிவித்த விஜயகலா, பொருத்து வீட்டுத் திட்டத்தினை வழங்குவதற்கு தமக்கும் உடன்பாடு இல்லையென குறிப்பிட்டார்.