Ad Widget

சரியான நிர்வாகம் வேண்டும் – சுரேஸ்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா அல்லது 13ஐ தாண்டி செல்வார்களா என்பதைவிட, நிர்வாகங்கள் சரியாக இயங்கவேண்டும். ஊழல் அற்ற சேவையாக இருக்கவேண்டும். இது போக்குவரத்துத் துறையிலும் இடம்பெற வேண்டும் என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

suresh

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாணத்திலுள்ள சாலைகளுக்கு பேரூந்துகள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றபோது, அந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

‘முன்னைய அரசாங்கம் ஊழல் நிறைந்த ஆட்சியாக இருந்தது என்பதை கடந்த 60 நாட்களில் அறிந்திருப்பீர்கள். இதில் போக்குவரத்தும் உள்ளடக்கம். இனியும் அப்படி இருக்கக்கூடாது, போக்குவரத்துத்துறை திருந்த வேண்டும். பழைய நிலைக்கு மாறவேண்டும். உங்களது சேவை மக்களுக்கான சேவையாக இருக்கவேண்டும். பணியாளர்கள் எவ்வளவு கஸ்டப்படுகின்றார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். உங்களது சேவையை நாங்கள் கொச்சைப்படுத்தவில்லை.

பாடசாலை மாணவர்களுக்கான காலை, மாலை நேரத்துக்கான போக்குவரத்து சேவையில், கஸ்ரமிருந்தாலும் பஸ் பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும். கிராமப்புற மாணவர்களின் போக்குவரத்தில் கவனம் செலுத்தி செயற்பட வேண்டும். மாணவர்களது போக்குவரத்தில் எந்தவொரு இடையூறும் இல்லாதவாறு போக்குவரத்துக்கள் இடம்பெறவேண்டும். தனியாருக்கும் உங்களுக்கும் போட்டி இருக்கலாம். மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது.

யுத்தம் முடிவடைந்து 6 வருடங்கள் ஆகிய நிலையில் கிளிநொச்சி பேரூந்து நிலையம் இதுவரையில் அமைப்படாதது கவலைக்குரிய விடயம். இதனை அமைப்பதில் சில சிக்கல்கள் இருந்ததாக அறிந்தேன். இந்தநிலை நீடிக்கப்படக்கூடாது. பேரூந்து நிலையம் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தை இராணுவம் கையகப்படுத்தியுள்ளது. அதனை உரியவர்கள் ஊடாக பெற்று, பேரூந்து நிலையம் அமைப்பதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

போக்குவரத்து சேவையில் உள்ள இன்னுமொரு பிரச்சினை நேர அட்டவணை. இதனை சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் நடைமுறையில் இருப்பது சரியாக இருக்கலாம் அல்லது தவறாக இருக்கலாம். அரச போக்குவரத்து சேவை, தனியார் போக்குவரத்து சேவைக்கான நேரங்கள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். இதனையும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் கவனத்தில் எடுக்கவேண்டும்.

நாம் நல்லாட்சியை விரும்புகின்றோம். தற்போது நல்லாட்சி நடைபெறுகின்றது என்பதை நம்புகின்றோம். எனவே அனைவரும் சுதந்திரமாக செயற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. சுதந்திரமாக செயற்பட்டு மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குங்கள்’ என்றார்.

Related Posts