Ad Widget

சமூக சுகாதாரத் தொண்டர்கள் வடமாகாண சபையின் முன்பாக ஆர்ப்பாட்டம்

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் பணியாற்றும் சமூக சுகாதாரத் தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி வடமாகாண சபையின் முன்பாக செவ்வாய்க்கிழமை (24) ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெறும் வேளையில், அமர்வில் கலந்துகொள்ள வரும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு சமூக சுகாதாரத் தொண்டர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

2 மணித்தியாலங்கள் ஒத்திவைக்கப்பட்ட சபை அமர்வுகள் 11.34 மணியளவில் மீண்டும் ஆரம்பமாகியது. சபை அமர்வுகள் முடிவடைந்த பின்னரே இவர்களுடன் வடமாகாண சபையினர் உரையாட முடியும் எனக்கூறியதையடுத்து, இவர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்கள் 5 வருடம் தொடக்கம் 15 வருடங்கள் கடமையாற்றியிருக்கின்ற போதும் அவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படாத நிலையில் 6 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு சேவையாற்றி வருகின்றனர். குறித்த 6 ஆயிரம் ரூபாய் சம்பளமும் கடந்த வருட இறுதியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறும், தமது சம்பளத்தை அதிகரிக்குமாறும் கோரி இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

Related Posts