Ad Widget

சமுர்த்தி வழங்கலில் பாரபட்சம் காட்டியதாக முரண்பாடு: யாழில் இளம் குடும்பப் பெண் தற்கொலை முயற்சி!

கிராம மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் திட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் பாரபட்சம் காட்டியதாக எழுந்த முரண்பாட்டையடுத்து 25 வயதுடைய இளம் குடும்பப் பெண் நஞ்சு அருந்தி உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்.

crime scene tape focus on word ‘crime’ in cenematic dark tone with copy space

இந்நிலையில், நஞ்சருந்திய அவரை உறவினர்கள் உடனடியாக அழைத்துச்சென்று சாவகச்சேரி வைத்தியசாலை அனுமதித்தனர். இந்தச் சம்பவம் கொடிகாமம் பாலாவி பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

தென்மராட்சி பாலாவி பகுதியில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஊடாக உதவிப் பொருட்கள் வழங்கும் செயற்பாடு நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் தெரிவிக்கையில்,

உதவிப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கையின்போது, இரண்டு குடும்பங்களுக்கு உதவிப் பொருட்களை வழங்க சமுர்த்தி உத்தியோகத்தர் மறுத்துள்ளார்.

புதிய பதிவுடைய குடும்பங்களுக்கு தற்போது வழங்க முடியாது எனவும் ஏனையோருக்கு வழங்கப்பட்ட பின்னரே புதிய பதிவுடையவர்களுக்கு வழங்குவதைத் தீர்மானிக்க முடியும் என்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

இதனால் உதவிப் பொருட்கள் வழங்கப்படாத இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், சமுர்த்தி உத்தியோகத்தருடன் முரண்பட்டதுடன் தாக்குதல் நடத்தவும் முற்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸாருக்கு சமுர்த்தி உத்தியோகத்தரால் முறைப்பாடு வழங்கப்பட்டது.

எனினும் தற்போதைய சூழ்நிலைக் கருத்திற்கொண்டு இரு தரப்பினரையும் அழைத்து இணக்கமாகச் செல்லுமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் அறிவுறுத்தப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர்.

எனினும் அன்றையதினமே சமுர்த்தி உத்தியோகத்தர் அந்தப் பகுதிக்குச் சென்று மீளவும் இந்தப் பிரச்சினையை முன்னிறுத்தி அந்தப் பகுதியைச் சேர்ந்த சமுர்த்தி பயனாளிகளையும் அழைத்து தன்னுடன் முரண்பட்டவர்களைக் கைதுசெய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், தற்போதைய சூழ்நிலையில் மக்களை ஒன்றுகூட்ட வேண்டாம் என்று சமுர்த்தி உத்தியோகத்தரைக் கேட்டுக்கொண்டனர். எனினும் அவர் உடன்பட மறுத்தார்.

இதற்கிடையில் சமுர்த்தி உத்தியோகத்தர் தனக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறார் என்று குற்றஞ்சாட்டிய இளம் குடும்பப் பெண் நஞ்சருந்தி உயிரை மாய்க்க முற்பட்டார். அவரை உறவினர்கள் உடனடியாக அழைத்துச் சென்று சாவகச்சேரி வைத்தியசாலையிர் அனுமதித்தனர்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தற்கால நிலமையில் உதவிப் பொருட்கள் வழங்கப்படும் போது அனைவருக்கும் அவை சென்றடைய வேண்டும். அதுதொடர்பாக அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Related Posts