இலங்கை தமிழ்- சிங்கள இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு திட்டமே தீர்வாக அமையும், அவ்வாறான தீர்வு முன்வைக்காவிட்டால் தமிழர்கள் தனிநாட்டை கோருவதை தவிர வேறு வழி இருக்காது என அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான பொதுமக்கள் கருத்துக்களை அறியும் குழு முன்னிலையில் மக்கள் கூறியுள்ளனர்.
அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளும். குழு யாழ்.மாவட்டச் செயலகத்தில் யாழ். மாவட்டத்திற்கான இருநாள் அமர்வுகளை நடத்தியிருந்தது.
மேற்படி இரு நாள் அமர்வுகளில் பொதுமக்களால் மேற்படி கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமையினை காண முடிந்தது. மேற்படி அமர்வில் விடயம் தொடர்பாக மக்கள் முன்வைத்த கருத்துக்களாவன,
இலங்கைக்கு அந்நியர்கள் சுதந்திரம் கொடுத்தபோது ஆட்சி அதிகாரம் சிங்கள மக்களுக்கு தாரை வார்க்கப்பட்டது. அன்று தொடக்கம் தமிழ் மக்கள் இந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
தமிழர்களுடைய உரிமைகளை மீட்டுக் கொடுப்பதற்கும், தமிழர்களுக்கும் சிங்கள மக்களுக்கு சமமான அதிகாரங்கள் மற்றும் உரிமைகளை வழங்குவதற்கும் நடந்த பேச்சுவார்த்தைகள், செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் முறிக்கப்பட்டமையும், கிழித்து வீசப்பட்டமையும் நடந்த உண்மையாகும்.
நல்லாட்சி அரசாங்கத்திலும் இலங்கையின் எதிர்கட்சிகள் ஆசனத்தில் இருந்து கொண்டிருக்கும் எம்மவர்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். மேலும் இதுவரை கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்களில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. என்பதுடன் அவர்களுடைய அங்கத்துவமும் இருந்திருக்கவில்லை.
இந்நிலையில் புதிய அரசியலமைப்பு மறுசீரமைப்புக்காக எங்களுடைய பங்களிப்பும் கோரப்படுகின்றது. இந்நிலையில் தமிழ் மக்கள் வடகிழக்கு இணைந்த தாயக பகுதியில் சமஷ்டி முறையிலான ஒரு தீர்வே தீர்வாக அமைய வேண்டும்.
அவ்வாறான ஒரு தீர்வு வழங்கப்படாதுபோனால் தமிழ் மக்கள் மீண்டும் தனிநாட்டுக் கோட்பாட்டை வலியுறுத்த நேரிடும். என்ற கருத்துக்கள் இரு நாள் அமர்வுகளில் வழங்கப்பட்டுள்ளது.
இரு நாள் அமர்வுகளிலும் 153 தனி நபர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் சார்ந்தவர்களின் கருத்துக்களும், 5 அரசியல் கட்சிகளின் கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.