Ad Widget

சண்டிலிப்பாயில் தனது பிரிவுபசார விழாவில் உயிர்விட்ட கிராம அலுவலர்!

கடமையில் இருந்து ஓய்வு பெறுவதையொட்டி பிரதேச செயலகத்தால் நடத்தப்பட்ட பிரிவுபசார விழாவில் விழா நாயகரான கிராம அலுவலர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்தார்.

இந்தச் சோகச் சம்பவம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. சண்டிலிப்பாய், கல்வளையைச் சேர்ந்த இராசையா நித்தியானந்தன் (வயது 60) என்ற கிராம அலுவலரே உயிரிழந்தவர் ஆவார்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் ஆண்டு நிறைவு நிகழ்வும் சண்டிலிப்பாய் வடக்கு (ஜே/141) கிராம சேவகர் இராசையா நித்தியானந்தனின் பிரிவு உபசார நிகழ்வும் நேற்று சனிக்கிழமை சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் விழா நாயகரான ஒய்வுபெறும் கிராம அலுவலர் இராசையா நித்தியானந்தனின் பிரிவுபசார நிகழ்வு இடம்பெற்றபோது அவர் உரை நிகழ்த்த அழைக்கப்பட்டார்.

அவர் அவ்வேளை தாம் கடமையில் இருந்து ஒய்வு பெறவிரும்பவில்லை எனத் தனது உரையில் அவர் கூறிக் கொண்டிருந்தார். அவ்வாறான நிலையிலேயே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் அங்கு சரிந்து விழுந்தார். உடனடியாக அவர் மானிப்பாய் கிறீன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

கடந்த 33 வருடங்களாக கிராம சேவகராகக் கடமையாற்றிய இவர் தனது கடமைக்கு அப்பால் நலிவடைந்துள்ள மக்களுக்கான வாழ்வாதார உதவிகளைத் தனிப்பட்ட ரீதியில் வெளிநாட்டில் உள்ள ஈழத் தமிழர்களிடம் இருந்து பெற்று வழங்கி வருபவர்.

நேற்றும் தன்னுடைய முயற்சியால் வாழ்வாதார உதவிகளைப் பயனாளிகளுக்கு அவர் வழங்கினார். இந்தச் சம்பவத்தை அடுத்து சண்டிலிப்பாய் பகுதி பெரும் சோகமயமாகக் காட்சி அளித்ததுடன் இந்தப் பிரிவுபசார நிகழ்வில் கலந்துகொண்ட பலர் அதிர்ச்சி அடைந்தனர்.

Related Posts