Ad Widget

சட்டவிரோத மணல் கடத்தும் வாகனங்களை அரசுடமையாக்க உத்தரவு

யாழ்.மாவட்டத்தின் தீவுப்பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடும் வாகனங்களை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, வாகனங்களை சட்டப்படி அரசுடமையாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் செவ்வாய்க்கிழமை (23) உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணையொன்றின் பிணை மனுக்கோரல் நேற்று செவ்வாய்க்கிழமை (23) மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவை பொலிஸாருக்கு நீதிபதி பிறப்பித்தார்.

ஊர்காவற்றுறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் ஊர்காவற்றுறை பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு நீதிபதி வழங்கிய கட்டளைகள் வருமாறு,

வேலணை, சாட்டி, மண்கும்பான் மற்றும் அல்லைப்பிட்டி ஆகிய பகுதிகளில் கடலோர மண் அகழ்வில் ஈடுபடுவோரைக் கைது செய்தல், மண் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களைக் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி அரசுடமையாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதனைவிட தீவுப்பகுதியில் வன்செயல்களை கட்டுப்படுத்தல், சட்டவிரோத குற்றங்கள் புரிவோரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் நடவடிக்கையை பொலிஸார் எடுக்க வேண்டும்.

தீவுப்பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி கால்நடைகளை இரவு நேரங்களில் கடத்தும் செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மூலம் மண்டைதீவுச் சந்தி அல்லது பண்ணைச் சந்தியில் பொலிஸ் காவலரணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீவுப்பகுதியில் பனை மரங்கள் வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல், மற்றும் வெட்டிய பனை மரங்களை கடத்தும் வாகனங்களைக் கைப்பற்றி சட்டரீதியாக அரசுடமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஊர்காவற்றுறை, வேலணை ஆகிய பிரதேச செயலர்களுடன் நெருங்கி தொடர்புகளை ஏற்படுத்தி, கடத்தல்களை தடுக்க நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஊர்காவற்றுறை, நாரந்தனை, தம்பாட்டி பிரதேசங்களில் வாள்வெட்டுக்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும்.

அபாயகரமாக ஆயுதங்களை கையாள்பவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊர்காவற்றுறை, புங்குடுதீவு, வேலணை, மண்கும்பான், அல்லைப்பிட்டி, மண்டைதீவு வரையிலான பொலிஸ் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், மக்கள் விழிப்புக்குழுக்களை ஏற்படுத்தி குற்றங்களை தடுப்பதற்கு பொலிஸ் கட்டளைச் சட்டம், குற்றவியல் கோவை ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு நீதிபதி வழங்கிய உத்தரவுகள் வருமாறு,

மல்லாகம், சுன்னாகம், ஏழாலை பகுதிகளில் குற்றச் செயல்கள் அதிகரித்துக் காணப்படுகின்றது. வீதியோர சண்டித்தனங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றது. அதனை உடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோரை குற்றவியல் நடவடிக்கை கோவையின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவேண்டும்.

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் பெண் பிள்ளைகளுக்கு பின்னால் அலைந்து திரிபவர்கள் மீது அலைந்து திரிவோர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தல்.

சட்டவிரோதமாகக்கூடிய 5 பேருக்கு மேற்பட்ட நபர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தல்.

குற்றச் செயல்கள் நடைபெறும் பிரதான பகுதியென பொலிஸ் புலனாய்வின் மூலம் இனங்கண்டு, அப்பிரதேசத்தில் தொடர் பொலிஸ் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு குற்றச் செயல்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.

கத்தி, வாள் வைத்திருக்கும் நபர்களை அபாயகரமான ஆயுதங்கள் வைத்திருக்கும் குற்றச்சாட்டில் கைது செய்தல் வேண்டும். ஆகிய உத்தரவுகளை நீதிபதி வழங்கினார்.

Related Posts