வவுனியாவில் சட்டவிரோத கருக்கலைப்பு காரணமாக குடும்ப பெண் ஒருவர் மரணமடைந்தமை தொடர்பில் வவுனியா வைத்தியசாலை சிற்றூழியரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது –
சட்டவிரோதக் கருக்கலைப்புச் செய்தபோது ஏற்பட்ட அதிகரித்த இரத்த போக்கு காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண் ஒருவர் கடந்த சனிக்கிழமை மரணமடைந்தார்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிஸார் வவுனியா வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றும் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.
குறித்த குடும்ப பெண்ணின் கருவை ஒரு தொகை பணத்தினை பெற்று தனது வீட்டிற்கு வரவழைத்து கருக்கலைப்பு செய்தார் என வைத்தியசாலை சிற்றூழியரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சிற்றூழியரை வவுனியா நீதிமன்றத்தில் நேற்றுசெவ்வாய்க்கிழமை முற்படுத்திய வேளை அவரை 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இக்கருக்கலைப்பு காரணமாக ஆசிகுளம், தரணிக்குளத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான லாசஸ் குளோறா (வயது 33) என்ற இளம் குடும்ப பெண்ணே மரணமடைந்தவராவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.