Ad Widget

கோத்தாவுக்கு எதிராக மாதகல் பொதுமக்கள் உயர் நீதிமன்றில் மனு!

வலிகாமத்தில் பலாலி படைத் தளத்துக்கு வெளியே மக்கள் காணிகளை உள்ளடக்கி தடுப்பு வேலிகளை அமைப்பதால் தங்களால் அந்தப் பகுதியில் மீளக்குடியேற முடியாதுள்ளதாகத் தெரிவித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக மாதகல் மக்கள் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளனர்.

“2009ஆம் ஆண்டே போர் முடிவுக்கு வந்துவிட்டபோதிலும் தாங்கள் தமது சொந்தக் கிராமங்களுக்குச் செல்லவோ சொந்தக் காணிகளில் குடியிருக்கவோ அனுமதிக்கப் படவில்லை. மாறாக வலிகாமம் பலாலி படைத்தளத்துக்கு வெளியேயுள்ள மக்களது நிலப்பகுதிகளையும் உள்ளடக்கி சுற்றிவேலி அடைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்தப் பகுதிக்குள் எவரும் உட்பிரவேசிக்கலாகாது என்ற அறிவித்தலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.”

இவ்வாறு மாதகல் மேற்குப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள், நேற்று தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் முறையிட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் மேற்கு செயலாளர் பிரிவைச் சேர்ந்த ஆறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணி மோகான் பாலேந்திரா ஊடாக தங்கள் சார்பிலும் அந்தப் பகுதிப் பொது மக்களின் நலன் சார்பிலும் இந்த மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெட்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியவர்களை அவர்கள் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளனர்.

வடபகுதியில் ஏற்பட்ட மோதல்களின் காரணமாக 1992ஆம் ஆண்டிலிருந்து தாங்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருவதாகவும் வடக்கில் 2009ஆம் ஆண்டு மோதல்கள் முடிவுக்கு வந்தபோதிலும் தமது சொந்தக் காணிகளுக்கு குடும்பங்களுடன் தங்களால் திரும்பமுடியாமல் இருப்பதாகவும் அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த மக்கள் தமது சொந்தக் காணிகளுக்குத் திரும்பி அங்கு வசிப்பது நல்லிணக்கப்பாட்டுக்கான ஒரு முக்கிய அம்சமாகும். எனவே போர் 2009ஆம் ஆண்டே முடிவடைந்து விட்டதால் இது உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

வலிகாமம் பகுதியில் அந்தப் பகுதி மக்கள் குடியமர்த்தப்பட வேண்டுமென்று அந்த மக்களின் உரிமைகளை நிலைநாட்டி உயர்நீதிமன்றம் ஏற்கனவே கட்டளையொன்றை பிறப்பித்திருந்தது. ஆனால் அந்தப் பகுதிக்குத் திரும்பவோ தமது காணிகளில் குடியேறவோ அனுமதிக்கப்படவில்லை என்பதை நீதிமன்றின் கவனத்துக்கு அவர்கள் கொண்டுவந்துள்ளனர்.

அவர்கள் மேற்கொண்டும் தெரிவித்துள்ள முறைப்பாட்டில் தமது காணிகள் இருக்கும் பகுதியானது உயர் பாதுகாப்பு வலயம் என்று கூறும் சட்டமோ ஒழுங்கு விதிகளோ ஒருபோதும் இருந்ததில்லை. மற்றும் 2011ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் அவசரகால நிலைமை நீக்கப்பட்டதை அடுத்து உயர் பாதுகாப்பு வலயம் என்று இலங்கையில் எந்தப் பகுதியும் பிரகடனப்படுத்தப்படுவதற்குச் சட்ட அங்கீகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளதுடன் தங்களையோ வேறு அப்பகுதி மக்களையோ மீளக் குடியமர்வதிலிருந்து தடுப்பதற்கு பிரதிவாதிகளுக்கு அதிகாரமளிக்கும் வகையில் செல்லுபடியாகும் சட்டம் எதுவும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசமைப்பின் கீழ் தங்களுக்குள்ள உரிமையின்படி மீளவும் தங்கள் காணிகளில் சென்று குடியமர்வதற்கேற்ற தமது அடிப்படை உரிமைகளை நிலைநாட்டித் தீர்ப்பொன்றை வழங்கும்படி மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தைக் கேட்டுள்ளனர்.

Related Posts