பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின், சகல வங்கிக்கணக்குகளையும் சோதனைக்கு உட்படுத்துமாறு காலி நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் டி.எம்.எஸ். ஜயரத்ன மற்றும் அவன்கார்ட் நிறுவன பணிப்பாளர் சபையின் அனைத்து அங்கத்தவர்களினதும் வங்கிக் கணக்குகளையும் சோதிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டுக்கு திரும்பியுள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் டி.எம்.எஸ். ஜயரத்ன வெளிநாட்டுக்கு மீண்டும் செல்வதற்கும் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
காலி நீதிமன்ற நீதவான் நிலுபுலி லங்காபுரவே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
அவன்கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள மிதக்கும் ஆயுதக் களஞ்சிய கப்பல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர், நீதிமன்றத்தில் மேலதிக அறிக்கையை சமர்ப்பித்தனர் இதனையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிதி தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் குற்றச்செயல் இடம்பெற்றுள்ளதா என விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறிப்பிட்ட நபர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பான அறிக்கைகளை பெற்றுக்கொள்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.