Ad Widget

கொலைகள், பாலியல் துஷ்பிரயோகம், போதைப் பொருள் நிறைந்து கிடக்கும் வடக்கு கிழக்கு – மாவை

வடக்கு, கிழக்கில் கொலைகள் மட்டுமன்றி பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்டவையும் நிறைந்து காணப்படுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வந்த சமூகசேவை உத்தியோகஸ்தர் சச்சிதானந்தம் மதிதாயன் (வயது 44) மண்டூரிலுள்ள அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாதோரினால் கடந்த 26ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

இக்கொலையைக் கண்டித்தும் இக்கொலையுடன் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் திங்கட்கிழமை காலை ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்

´சமூகசேவை உத்தியோகஸ்தர் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். சமூக முன்னேற்றதுக்காக சமூக சீரழிவுகளுக்கு எதிராக உழைத்து நன்மதிப்பை பெற்ற உயர்ந்த அதிகாரியாக அவர் திகழ்கின்றார். அவர் படுகொலை செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துள்ளன. இருப்பினும் இக்கொலையுடன் தொடர்புடையவர்களை பொலிஸார் இன்னமும் கைது செய்யாமலுள்ளமை ஆச்சரியமாக உள்ளது´ என்றார்.

´மக்களின் எழுச்சியை தடுக்க வேண்டுமானால், சமூகசேவை உத்தியோகஸ்தரின் கொலையுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்´ என்றார்.

Related Posts