Ad Widget

கொரோனா தனிமைப்படுத்தல் முகாமால் ஆபத்து – கோப்பாய் மக்கள் சுகாதார அமைச்சுக்கு கடிதம்!

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமால் ஆபத்து என கோப்பாய் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு அப்பகுதி மக்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அத்தோடு, கடிதத்தின் பிரதிகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ். மாவட்டச் செயலர், பாதுகாப்புப் படைகளின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில், “கடந்த 20ஆம் திகதியில் இருந்து பலர் இங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 3 பேர் வரை வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்னர்.

கடந்த முறை இதேபோன்று தனிமைப்படுத்தல் முகாமை அமைப்பதற்கு கிராம மக்களாகிய நாம் எமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தோம்.

ஆனால் இம்முறை நாடு முழுவதும் வைரஸ் தொற்று இனங்காணப்பட்டு வரும் காரணத்தால் மனிதாபிமான அடிப்படையில் எமது எதிர்ப்பைக் காட்டாமல் அமைதியாக இருந்தோம்.

இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள அயல் கிராமங்களுக்கு இதனால் எந்தப் பாதிப்பும் வராது என நாம் நம்பியிருந்தோம். ஆனால் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களால் நம்பிக்கை இழந்துள்ளோம்.

தனிமைப்படுத்தப்பட்டவர் தப்பிச்செல்ல முயன்றார். அயலில் உள்ளவர்களுடன் சட்டவிரோத மதுபான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கின்றனர் என்று ஊடகங்கள் வாயிலாக அறிந்துள்ளோம்.

இது எமக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தற்போது எமது பிரதேசத்துக்கு வருவதற்கு ஏனையவர்கள் அச்சப்படுகிறார்கள். நாளடைவில் ஒதுக்கப்பட்டவர்களாக ஆக்கப்படுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நிம்மதியாக வீதிகளில் நடமாட முடியவில்லை . பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம்.

மனிதாபிமான ரீதியில் நாம் ஒத்துழைப்பு வழங்கியதற்கு எமக்கு தொற்று நோயையா பரிசாக வழங்கப்போகிறீர்கள்.

அமைதியாக வாழ்ந்த வாழ்வைச் சீரழித்து விட்டதாகவே எண்ணுகிறோம். எனவே உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்” என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts