Ad Widget

கொரோனாவினால் உயிரிழந்தவரை அவருடைய வீட்டிற்குக் கொண்டு சென்று மக்கள் அஞ்சலி- கிளிநொச்சியில் பரபரப்பு

கிளிநொச்சியில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவரை, அவருடைய வீட்டிற்குக் கொண்டு சென்று மக்கள் அஞ்சலி செய்ய அனுமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி- உதயநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த முன்னாள் கிராம அலுவலர் ஒருவர், கடந்த 16ஆம் திகதி, மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவருடைய இறுதி நிகழ்வுகள் அவரின் வீட்டில் நடைபெறும் என்று ஒலிபெருக்கி ஊடாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

குறித்த விடயம் தொடர்பில் சமூக ஆர்வலர்களாலும் அரச உத்தியோகத்தர்களாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதாவது, கொரோனாவால் ஏற்கனவே தனிமைப்படுத்துள்ள குறித்த மரணம் நிகழ்ந்த வீட்டில், கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை, மக்கள் அஞ்சலிக்காக அனுமதிக்கின்றபோது அங்கு செல்கின்ற மக்கள் ஊடாக மீண்டும் கொரோனாப் பரவல் ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை 7 மணியளவில், அவரின் சடலம் வவுனியாவிலுள்ள பூந்தோட்டம் மயானத்திற்கு எடுத்துச் செல்வதற்காக எனத் தெரிவிக்கப்பட்டு, எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது.

ஆனால், வாகனம் வவுனியா செல்வதற்கு பதிலாக உதயநகர் கிழக்கிலுள்ள அவருடைய வீட்டிற்குச் சென்று, வாகனம் அவர்களின் வீட்டின் உள்ளே சென்றிருக்கின்றது.

இதன்போது, அங்கு நின்றிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காகத் திரண்டிருக்கின்றனர்.

குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் அங்கிருந்து புறப்பட்ட வாகனம் மீளவும் வவுனியாவிற்குச் சென்றிருக்கின்றது.

இதற்கிடையில் கொரோனாவால் உயிரிழப்பவர்களை எரியூட்டும் இடத்தில் கூட மூன்று அல்லது நான்கு பேருக்கு மட்டுமே தூரத்தில் இருந்து பார்க்க அனுமதிக்கப்படுவது நடைமுறையாகும்.

அதேபோன்று, சடலத்தை எரியூட்டுபவர்கள் கூட முழுமையாக கொரோனாப் பரவலைத் தடுக்கும் வகையிலான ஆடைகளை அணிந்துகொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருப்பர்.

ஆனால் மரணச் சடங்களில் பங்குகொண்ட மக்கள் முகக்கவசம் தவிர வேறெந்த பாதுகாப்பினையும் கொண்டிருக்கவில்லை.

மேலும், குறித்த மரணச் சடங்கினை வீட்டில் நடத்துவதற்கான ஏற்பாட்டில், பிரபல வைத்தியர் ஒருவரும் முன்னின்று செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன், மரணச் சடங்கு குறித்த தகவலை வைத்திய அதிகாரி பணிமனையிருக்கு வழங்கியவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கடிந்துகொண்டமை தொடர்பிலான ஆதாரங்களும் ஊடகங்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.

கொரோனா தாக்கத்தில் இருந்து மீள்வதற்கு மக்களும் நாடும் கடும் சிரமப்பட்டுவரும் நிலையில், உயர் பதவியில் இருப்பவர்கள் இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்கின்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts