Ad Widget

கொடிகாமத்தில் ஊரடங்கு வேளை வீடு புகுந்து இளம் பெண் வெள்ளை வானில் கடத்தல்!!

கொடிகாமம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் ஊரடங்கு நேரத்தில் புகுந்த வெள்ளைவான் கும்பல் ஒன்று இளம் பெண் ஒருவரைக் கடத்தி சென்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் விடுவித்துள்ளனர்.

கொடிகாமம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று அதிகாலை ஊரடங்கு நடைமுறையில் இருந்தவேளை வெள்ளை வானில் வந்த 7 பேர் கொண்ட குழுவினர் வாளுகள், கொட்டான்கள், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து இளம் பெண் ஒருவரைக் கடத்திச் செல்ல முயன்றுள்ளனர்.

அதற்கு வீட்டில் இருந்த பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த போது, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் இளம் பெண்ணை வாள் முனையில் வெள்ளை வானில் ஏற்றி கடத்தி சென்றுள்ளனர்.

உடனடியாக சம்பவம் தொடர்பில் வீட்டார் கொடிகாமம் பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்த போதிலும் பொலிஸார் நேரில் வந்து முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் அவர்கள் பொலிஸ் நிலையம் செல்ல முயன்ற போது, கடத்தல்காரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு அருகில் இளம் பெண்ணை வாகனத்திலிருந்து இறக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பில் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற போது, அங்கு முறைப்பாட்டை ஏற்கும் பிரிவில் இருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர், “கடத்திச் செல்லப்பட்ட இளம் பெண் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதால் , இதனை கடத்தல் என முறைப்பாடு செய்ய முடியாது. ஊரடங்கு நேரத்தில் உங்கள் வீட்டிற்குள் வந்தார்கள் என்றே முறைப்பாடு வழங்க முடியும். இதனை பெரிதுபடுத்தாமல் விடுங்கள்” என எச்சரிக்கும் தொனியில் அறிவுறுத்தியுள்ளார். அதனால் பெற்றோர் முறைப்பாட்டை வழங்க தயக்கம் காட்டியுள்ளனர்.

அதன் பின்னரே பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் சகோதரன் உறவுமுறை கொண்ட ஒருவரின் தலைமையில் சென்ற குழுவினரே இந்தக் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் விவரம் பெற்றோருக்கு தெரிந்துள்ளது.

தற்போது இளம் பெண்ணின் பெற்றோர் , குறித்த சம்பவம் தொடர்பில் தமக்கோ தமது பிள்ளைக்கோ எதிர்காலத்தில் ஆபத்து நேரிடலாம் எனும் அச்சத்தில் உள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts