Ad Widget

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 26 பேர் கைது ; இருவருக்கு பிணை, 24 பேருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் நண்பர்கள் இருவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய போது, சட்டவிரோத கூட்டத்தைக் கூட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 26 பேரில் 24 பேரை வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் போது வழக்கில் முற்படுத்தப்பட்ட 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இருவரையே ஒரு லட்சம் ரூபாய் ஆள் பிணையில் விடுவிக்க நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுன்னாகம் இலங்கை வங்கி கிளைக்கு அண்மையான பகுதியில் உள்ள வீடொன்றில் பிறந்தநாள் நிகழ்வு இடம்பெற்றது.

முல்லைத்தீவைச் சேர்ந்த ரணா பிரசாத் (வயது -24) மருதனார்மடத்தைச் சேர்ந்த நெல்லையா நேமிநாதன் (வயது-20) ஆகிய இருவரது பிறந்தநாள் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது

இந்தக் கொண்டாட்டம் தொடர்பில் தகவல் அறிந்த யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸார், நேற்று மாலை 5 மணியளவில் பிறந்தநாள் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்றனர். நிகழ்வில் பங்கேற்ற 40இற்கும் மேற்பட்டோரிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அவர்களில் 26 பேரை மட்டும் கைது செய்த பொலிஸார், அவர்களை விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிப்பதாகத் தெரிவித்து அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில் நீண்ட இழுபறியின் பின்னர் சந்தேக நபர்கள் 26 பேரும் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு முற்படுத்தினர். சந்தேக நபர்களிடம் ஒவ்வொருவராக நேற்று அதிகாலை வரை வாக்குமூலம் பெறப்பட்டது.

சந்தேக நபர்கள் 26 பேரும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் முற்படுத்தப்பட்டனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரான்சிஸ் முன்னிலையாகி நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

“சந்தேக நபர்கள் சட்டவிரோதமான கூட்டத்தைக் கூடியிருந்தனர். வன்முறை ஒன்றுக்குத் தயாரான நிலையில் இருந்த வேளையில் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களின் கைவிரல் ரேகைகள் அரச பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களின் விவரங்கள் வடக்கு மாகாணத்திலுள்ள ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. வேறு பொலிஸ் நிலையங்களில் வழக்குகள் இருந்தால் சந்தேக நபர்களை ஒப்படைக்க வசதியாக அவர்களை விளக்கமறியலில் வைக்கவேண்டும்” என்று அவர் நீண்ட சமர்ப்பணத்தை மன்றில் முன்வைத்தார்.

சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், “பிறந்தநாள் நிகழ்வில் ஒன்றுகூடியவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களுக்கும் குற்றச்செயல்களுக்கும் தொடர்பில்லை. அவர்களைப் பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று சமர்ப்பணம் செய்தனர்.

இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான், சந்தேக நபர்கள் கோலங்களை அவதானித்து கடுமையாகக் கண்டித்தார்.

அத்துடன், வழக்கில் முற்படுத்தப்பட்ட சிறுவர்கள் இருவரது பெற்றோரையும் அழைத்து அறிவுரை வழங்கிய நீதிவான் ஏ.பீற்றர் போல், அவர்கள் இருவரையும் தலா ஒரு லட்சம் ரூபாய் ஆள் பிணையில் விடுவித்தார்.

ஏனைய 24 பேரையும் வரும் ஜூன் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிறந்தநாள் கொண்டாடக் கூடாது என்ற தனிச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சந்தேக நபர்களுக்கு எதிரான பிணை அறிக்கையை சர்ச்சைக்குரிய பொலிஸ் அதிகாரியான யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தயாரித்திருந்தார் என்று அறிய முடிகிறது.

பிறந்தநாள் கொண்டாடியவர்கள் வன்முறைக்குத் தயாராகினார்கள் என்று பொலிஸார் தெரிவித்த போதும் வாள் உள்ளிட்ட எந்தவொரு சான்றுப்பொருளையும் மீட்டு நீதிமன்றில் முன்வைக்கவில்லை.

Related Posts