Ad Widget

கூட்டுறவுப் பணியாளர்களுக்கு 30 வீத சம்பள உயர்வு – பொ.ஐங்கரநேசன்

வடமாகாணத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்கள் அனைவருக்கும் 30 வீத சம்பள உயர்வு வழங்கப்படும் எனவும், தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது மரணம் அடைந்த பனைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூபா ஒரு இலட்சம் உதவுதொகையாக வழங்கப்படும் எனவும் வடக்கு மாகாண கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அறிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் உள்ள பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்களுக்கும் அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை (14.03.2015) நடைபெற்றது. சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடமாகாண பனை தென்னைவள அபிவிருத்திச் சங்கங்களின் சமாச மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியின்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் குறிப்பிடும்போது,

கூட்டுறவுப் பணியாளர்கள் மிகநீண்டகாலமாகத் தங்கள் சம்பள உயர்வு தொடர்பாக முறையிட்டுவருகிறார்கள். இந்த விடயம் கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு சம்பள உயர்வு வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தின்படி, வடமாகாணத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் யாவும் இந்த வருடம் தை மாதம் முதல் நடைமுறைக்கு வரும்வகையில் 30 வீத சம்பள உயர்ச்சியை வழங்கவேண்டும். இச்சம்பள உயர்வை வழங்குவதற்கான கணிப்பீட்டு விபரங்கள் அடங்கிய சுற்றுநிருபம் கூட்டுறவுச் சங்கங்களின் நெறியாளர் குழுவுக்கு மிக விரைவில் அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும்,பனைத் தொழிலாளர்கள் மீன்பிடித் தொழிலாளர்ளைப் போன்றே தொழிலின்போது ஆபத்துகளை எதிர்கொள்பவர்களாக உள்ளனர். ஒவ்வொரு வருடமும் பனையில் இருந்து தவறி விழுந்து பலர் மரணிக்கின்றார்கள். பனைத் தொழிலாளர்கள் பெரும்பாலும் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியவர்கள். இதைக் கருத்திற்கொண்டு பனையில் இருந்து தவறிவீழ்ந்து மரணமடைந்த பனைத் தொழிலாளிகளின் குடும்பங்களுக்கு எனது அமைச்சு நிதியிலிருந்து ரூபா ஒரு இலட்சம் உதவு தொகையாக வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணசபை உருவாக்கப்பட்ட 2013 ஆம் ஆண்டை ஒரு கால எல்லையாகக் கொண்டு, 2013ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை தொழிலின்போது மரணமடைந்த பனைத் தொழிலாளிகளின் குடும்பங்கள் இந்த உதவு தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். இவர்கள், தங்கள் மாவட்டத்துக்குரிய பனை தென்னைவள கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்துக்கு ஊடாக அமைச்சுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

வடமாகாண பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் ந.கணேசனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடமாகாணசபை உறுப்பினர்கள் அ.பரஞ்சோதி, வே.சிவயோகம், அவுஸ்திரேலியாவில் இருந்து வருகைதந்த முன்னாள் தலைவர் க.நடராசா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

1

3

4

5

6

7

8

9

10

Related Posts