Ad Widget

கூட்டமைப்பை ரணில் ஏமாற்றியது உண்மைதான்- சிவஞானம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, ரணில் விக்ரமசிங்க நம்ப வைத்து ஏமாற்றியது உண்மைதான் என வட.மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“ஐக்கிய தேசியக் கடசியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் ஏமாற்றி விட்டார் என்று எமக்கு தெரிய வந்துவிட்டது.

அதுவரை நாம் ஐ.தே.க.வை நம்பியது உண்மைதான். ரணில் எம்மை நம்ப வைத்து ஏமாற்றியது உண்மைதான் அதனை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஒக்டோபரில் அரசியலமைப்பு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது, குழப்பம் வந்தபோது இதற்கு நான் பொறுப்பில்லை சபையே பொறுப்பு என கூறியிருந்தார். அதில் இருந்து அவர் எம்மை ஏமாற்றி விட்டார் என நாம் அறிந்து கொண்டோம்.

எனினும் நாம் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். மஹிந்த குடும்பத்தின் ஆட்சிக்கு மீண்டும் வந்து விடக் கூடாது என்றே தொடர்ந்தும் ஆதரவு கொடுத்தோம்.

இனிவரும் காலங்களில் ஐ.தே.க.வுக்கு ஆதரவான நாடாளுமன்ற பிரதிநிதிகள் இருக்கமாட்டார்கள். நாம் பட்டு தெளிந்து விடடோம். நாம் அனைவருடனும் பேசுவோம் அதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்குதான் ஆதரவு வழங்குவோம் என்று இல்லை. இனி நிபந்தையுடனேயே இறுக்கமான முறையில் நாம் அணுகுவோம். ஏற்கனவே நாம் அனுபவப்பட்டு விட்டோம்.

மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அண்மைக்காலமாக இந்த நாட்டில் இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை என்றும் அது பொருளாதார ரீதியான பிரச்சினையே என கூறி வருகின்றார். அவருடைய கருத்து தவறானது.

இந்த நாடு சுதந்திரம் பெற்றதன் பின்னர் அல்லது அதற்கு முன்னரும் கூட இங்கு வாழும் தமிழ் மக்களின் தனித்துவ தன்மை பேணப்பட வேண்டும். எமது இனம் சார்ந்த பிரச்சினைகள் இருந்தன. இப்போதும் இருக்கின்றன.

எமது தமிழ் இனம், மதம் மற்றும் மொழி ரீதியாக தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இந்த நாட்டில் இனப்பிரச்சினை உள்ளது என்பதை கடந்த கால அரசுகள் ஏற்றுள்ளனர்.

கடந்த ஆட்சியில் கூட இனப்பிரச்சனைக்கான தீர்வில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் வழிகாட்டல் குழுவில் கோட்டாபயவின் தரப்பினரும் இருந்தனர்.

தமிழர்களுக்கு இனப்பிரச்சனை இல்லை என்றால் ஏன் பங்குபற்றினீர்கள். எனவே எமது இனப்பிரச்சினையை தட்டிக்கழிக்க முடியாது. அரசுக்கு அதனை தீர்க்கும் கடமை இருக்கின்றது.பொறுப்புக்கூறலில் இருந்து விலக முடியாது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ காணாமல் போனவர்களை சுட்டுக்கொல்லவில்லை என்று கூறியுள்ளார். நாம் காணாமல் போனவர்களை சுட்டுக் கொன்றீர்கள் என சொல்லவில்லை.

அதாவது இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் உறவுகளினால் கையளிக்கப்படடவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்றே கோரி வருகின்றோம். எனவே அதனை வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.

Related Posts