Ad Widget

கூட்டமைப்பு ஆட்சி அமைக்க தமிழ் கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும் : சிறிகாந்தா வேண்டுகோள்

வடக்கு – கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆதரவு வழங்க வேண்டும் என ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான சிறீக்காந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார் .

யாழ். தனியார் விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “தமிழ் தேசிய மக்களும் முன்னணியில் இருந்து சில சாதகமான கருத்துக்கள் வந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இத்தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கின்றோம்.

எமது பின்னடைவுக்கு சில காரணங்கள் உள்ளன. யாழ். மாநகர சபை, நல்லூர் பிரதேச சபையில் மதவாத கருத்தக்களை சுயேட்சைக் குழுக்கள் பரப்பின.

இறுதி 10 நாட்களில் எமது பிரசாரத்தை தீவிரப்படுத்தியிருந்தோம். இதுவும் எமது பின்னடைவுக்கு காரணம். ஆனாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய சில சபைகளை தவிர பெரும்பாலான சபைகளில் நாங்கள் முன்னிலை வகிக்கின்றோம்.

எதுவாக இருந்தாலும், எந்த கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையிலே அனைத்து சபைகளின் தேர்தல் முடிவுகள் காணப்படுகின்றன.

இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிலையில் இருக்கும் சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலை கூட்டணி என்பன ஒத்துழைப்பு தர வேண்டும்.

சாவகச்சேரி நகர சபை, பருத்தித்துறை நகர சபை என்பனவற்றில் முன்னிலையில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆட்சி அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஆதரவினை வழங்கும்.

தேர்தல் பிரசாரத்தின்போது நாங்கள் ஒவ்வொருவர் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கினோம். ஆனால் தேர்தலின் பின்னர் மக்களுக்கு செய்ய வேண்டுய கடமைகளை செய்வதற்கு ஒன்றுபட வேண்டும்.

பங்காளிகளாக இருக்காவிட்டாலும் பகை இல்லாமல் சபைகளை நடத்தி மக்களுக்கான சேவையினை செய்ய வேண்டும். பிரிந்து நின்ற எங்களுக்கு இத்தேர்தலில் மக்கள் ஓர் ஆணையை தந்துள்ளார்கள். அதனை ஏற்றுச் செயற்பட வேண்டியது தமிழ் கட்சிகளின் கடமையாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கை வீண்போகாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்கின்றது. தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எமது நெஞ்சில் இருக்கின்றது. தமிழ் இனம் தலை நிமிர நாங்கள் என்ன விலை என்றாலும் கொடுக்க தயாராக இருக்கின்றோம்” எனத் தெரிவித்தார்.

Related Posts