Ad Widget

கூட்டமைப்பிடம் ஆதரவு கோரியுள்ள எதிரணி

ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளருக்குத் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு தெரிவித்து ஜாதிக ஹெல உறுமய உடன்பாடு ஒன்றிலும் கையெழுத்திட்டுள்ளது.

இவ்வாறு எதிரணியில் பௌத்த கடும்போக்கு அமைப்புகள் என்று கருதப்படும் கட்சிகளும், அமைப்புகளும் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பது இன்னும் தெரியவரவில்லை.

இந்தநிலையில் நாட்டில் ஆட்சி மாற்றம் தேவை என்றும் அதை ஏற்படுத்தும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கவேண்டுமென ஐ.தே.க பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது என்றும் அந்தக் கட்சியின் துணைத் தலைவர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் சில நெருடல்கள் இருக்கின்றன என்றும் அவற்றைக் களையும் வகையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. எனினும் தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவர்கள் எனக் கருதப்படும் ஹெல உறுமய, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவை தமது அணியில் உள்ளன என்பதை தாங்கள் உணர்ந்துள்ளதாகவும் இது தேர்தலுக்குப் பின்பு விட்டுக் கொடுப்புகள் பேச்சுவார்த்தை மூலம் சாத்தியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கக் கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனும் தமது தரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இருப்பினும் மாகாண சபைகளுக்குக் கூடுதல் அதிகாரங்கள் கொடுக்கும் எந்தப் பிரேரணையையும் தான் எதிர்ப்பதாகவும், முழுமையான சமஷ்டி முறை இலங்கையில் சாத்தியமில்லை என்றும் மைத்திரிபால சிறிசேனா கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts