Ad Widget

குருந்தூர் மலையில் மீட்கப்பட்டது பல்லவர் கால தாரா லிங்கம்!! – சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள்

குருந்தூரில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கமானது பல்லவர்காலத்திற்குரியது. அது தாரா லிங்கம் என அழைக்கப்படுகிறது. இவ்வாறுல சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் தெரிவித்துள்ளார்.

அதுதொடர்பில் அவர் தெரிவித்ததாவது;

மிக அண்மைய காலங்களில் தொல்பொருள் திணைக்களமானது பல ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த எமது இந்து சைவப்பாரம்பரியங்கள் மிக்க இடங்களை பௌத்தத்திற்குரியயவையாக சொந்தம் கொண்டாடி வருகின்றன.

அந்தவகையில் மிக அண்மையில் கையகப்படுத்தப்பட்ட இடமே குருந்தூர் மலைப்பகுதி. அதற்கு பௌத்தபிக்குமார்களும் பல வியாக்கியானங்களை வெளியிட்டிருந்தனர். குருந்தகம விகாரை என்றெல்லாம் கதை சொன்னதை நாம் பார்த்துக்கொண்டு இருந்தோம். ஆனால் உண்மைகள் ஒருகாலமும் உறங்குவதில்லை அவை தக்க சமயத்தில் வெளிக்கொணரப்படும் என்ற உண்மை மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இற்றைக்கு 2,400 வருட வரலாற்றினைக் கொண்ட பௌத்தம் யுகங்கள் தாண்டிய எம்மதச் சின்னங்களை உரிமை கொண்டாடுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. ஆக எமது சின்னங்களை வழிபாட்டு சின்னங்களை உரிமை கூறுவதை இனியாவது நிறுத்திக்கொண்டால் அது அவர்களுக்கு அழகு.

இவர்களால் இலங்கையில் மட்டுமே வரலாறுகளை மாற்ற முடியும். உலகில் உள்ள வரலாறுகளை மாற்றமுடியாது. தற்போது குருந்தூரில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கமானது பல்லவர்காலத்திற்குரியது. அது தாரா லிங்கம் என அழைக்கப்படுகிறது.

ஈழத்தே சோழர் காலத்திற்கு முந்தியே பெரும் சிவவழிபாட்டு இடங்கள் இருந்துள்ளன.

எனவே ஈழம் முழுவதுமே சிவனேயச் செல்வர்கள் வாழ்ந்த பூமி என்பதனை இனியாவது ஏனைவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். உண்மை என்பது நீண்டகாலத்திற்கு மறைக்க முடியாதது என்று விளங்கிக் கொள்ளட்டும் – என்றார்.

Related Posts