Ad Widget

குடாநாட்டைக் கலக்கிய கொள்ளைக் கும்பல் சிக்கியது!

யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் இடம்பெற்ற கொள்ளைகள் மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய 6 பேர் கொண்ட கும்பல் பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தக் கும்பலைச் சேர்ந்த ஆறு பேரும் அரியாலை பூம்புகார் பகுதியில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 33 தங்கப் பவுண் நகைகளும் 3 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன” என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

“யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைய நாள்களாக திருட்டுக்கள், கொள்ளைகள் மற்றும் வழிப்பறிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலையங்களின் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக அவற்றுக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தினேஷ் கருணாரத்னவின் கீழான சிறப்பு குற்றத் தடுப்பினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

நீதிமன்றப் பிடியாணைகளைக் கொண்டு தலைமறைவாகியோரைத் தேடி பொலிஸார் வலைவீசினர். அரியாலை பூம்புகார் பகுதியில் சந்தேகத்துக்குமான வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த நால்வரைக் கைது செய்தனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களிடம் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் திருட்டு – கொள்ளையிடப்பட்ட நகைகள் 33 பவுண் மீட்கப்பட்டன. அத்துடன் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன.

மேலும் சில நகைகள் மற்றும் பொருள்கள் விற்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன் சந்தேகநபர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களினால் பிறப்பிக்கப்பட்ட 21 பிடியாணைகளும் பொலிஸாரால் நிறைவேற்றப்பட்டன.

சந்தேகநபர்கள் ஆறு பேரும் சான்றுப்பொருள்களுடன் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் இன்று மாலை முற்படுத்தப்பட்டனர். அவர்கள் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts