Ad Widget

கிளிநொச்சியில் பல்வேறு இடங்களில் கொள்ளைக்குழு அடித்து மிரட்டி கொள்ளை

கிளிநொச்சி – முழங்காவில் – பல்லவராயன் – கட்டுசோலை பகுதியிலுள்ள வீட்டுக்குள் இன்று அதிகாலை சென்ற கொள்ளைக் கும்பல் ஒன்று, கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

வீட்டில் இருந்த கணவன், மனைவி ஆகியோரை அச்சுறுத்தி பணம் மற்றும் நகை என்பவற்றை கொள்ளைக்குழு கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய் பணம் மற்றும் முப்பத்தாறு பவுண் தங்க நகை என்பன கொள்ளைக்குழுவினால் கொள்ளைடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முகத்தை துணியால் மறைத்துக் கட்டியபடி உள்நுழைந்த திருடர்கள் தொலைபேசியை அடித்து நொருக்கியுள்ளதாகவும் வீட்டில் இருந்த வயோதிய கணவன், மனைவியை பொல்லுகளால் அடித்து, மிரட்டி உட்கார வைத்துவிட்டு கொள்ளையடித்துள்ளனர்.

இதுதொடர்பில் முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், முழங்காவில் பொலிஸார் மற்றும் கிளிநொச்சி தடவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கடந்த சனிக்கிழமை இரவு பதினொரு மணியளவில் ஜெபுரம் தெற்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் நுழைந்த திருடர்கள் இதேபோல் வீட்டில் இருந்த கணவன், மனைவி மற்றும் கணவனுடைய அம்மா ஆகியோரை பொல்லுகளால் அடித்து மிரட்டி, இரண்டரைப்பவுண் நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

இதுதொடர்பாக நாசிக்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், நாச்சிக்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு இடங்களிலும் நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்களும் ஒரே வகையாக இருப்பதனால் இரண்டுக்கும் தொடர்பு இருக்குமா அல்லது வெவ்வேறு திருட்டுக் கும்பல்களாக இருக்குமா என்ற சந்தேகத்தில் கிளிநொச்சி, முழங்காவில், நாச்சிக்குடா பொலிஸார் இணைந்து பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், கடந்த செவ்வாய்க்கிழமையும் இதே பாணியில் கிளிநொச்சி முரசுமோட்டை பழையகமம் பகுதியில் உள்ள வீடொன்றில் வீட்டில் இருந்த வயதான தம்பதியர்களை அச்சுறுத்தி வீட்டிலில் இருந்த இருபதாயிரம் பணம் மற்றும் ஐந்தரைப் பவுண் நகைகள் என்பவற்றை திருடிச் சென்ற சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts