Ad Widget

கிளிநொச்சியில் பயிற்சி வழங்குவதாக கைதான முன்னாள் போராளி மீது குற்றச்சாட்டு

வெளிநாடு சென்ற நிலையில், திருப்பி அழைக்கப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளியான நடராஜா சபேஸ்வரனை எதிர்வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முயற்சிப்பதாகவும், கிளிநொச்சியில் வைத்து முன்னாள் போராளிகளுக்கு பயிற்சி வழங்கினார் என இவர் மீது பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு அமையவே கொழும்பு புதுக்கடை நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி அதிகாலை கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நடராஜா சபேஸ்வரன், இன்றையதினம் கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முயற்சிப்பதாகவும், கிளிநொச்சியில் வைத்து முன்னாள் போராளிகளுக்கு பயிற்சி வழங்கினார் என்று இவரிடம் பயிற்சி பெற்ற ஒருவர் தங்களிடம் தெரிவித்ததாக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றதா என நீதிபதி இதன்போது வினவினார்.

இதற்கு பதிலளித்த பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் இதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலஅவகாசம் கோரியதனையடுத்து நீதிவான் இந்த விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கிளிநொச்சி – பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த நடராஜா சபேஸ்வரன் கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து சென்னைக்குச் சென்ற நிலையில், இந்திய அதிகாரிகளுக்கு அறிவித்து திருப்பி அழைத்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இவரைக் கைதுசெய்து வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைத்திருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான நடராஜா சபேஸ்வரன், இறுதிக்கட்ட யுத்தத்தின் இறுதி நாட்களான 2009 ஆம் ஆண்டு மே மாதம் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்திருந்தார்.

யுத்தத்தின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இறுதி யுத்தம் இடம்பெறுவதற்கு சில வருடங்களுக்கு முன்னரே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து விலகியிருந்த சபேஷ்வரன், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த அனைவரும் சரணடைய வேண்டும் என இராணுவம் விடுத்த உத்தரவிற்கு அமையவே சரணடைந்திருந்தார்.

இதற்கமைய ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஜோசப் முகாம் மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது தாய் நீதிமன்றில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவிற்கு அமைய நீதிமன்றினால் கடந்த 2010 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து திருமணம் முடித்து வாழ்ந்து வந்த நிலையில் உறவினரது திருமணமொன்றில் கலந்துகொள்வதற்காக கடந்த ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி இந்தியாவுக்கு சென்றபோதே நடராஜா சபேஸ்வரன் கைதுசெய்யப்பட்டார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி மாலை 5 மணிக்கு புறப்படவிருந்த விமானத்தில் பயணம் செய்ய விருந்த சபேஸ்வரனை, கடவுச்சீட்டில் தவறு இருப்பதாக தெரிவித்து தடுத்து நிறுத்திய அதிகாரிகள், இரவு 11 மணிக்கே சென்னை செல்ல அனுமதித்துள்ளனர்.

எனினும் சென்னை விமான நிலையத்தைச் சென்றடைந்த நடராஜா சபேஷ்வரனிடம், ஸ்ரீலங்கா விமான நிலைய அதிகாரிகள் திருப்பி அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அறிவித்த இந்திய அதிகாரிகள், அவரை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதற்கமைய ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி அதிகாலை, கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் சபேஷ்வரனை கைதுசெய்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts