Ad Widget

கிளிநொச்சியில் கடத்தப்பட்ட வர்த்தகர் அடிகாயங்களுடன் காவல்துறையில் தஞ்சம்!

கிளிநொச்சியில் வைத்து சில நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட வர்த்தகர் ரதீசன் உடலில் பலத்த அடிகாயங்களுடன் கடத்தப்பட்டுள்ளவர்களால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் கிளிநொச்சி காவல்துறையில் சரணடைந்துள்ளார். சாவகச்சேரி, இடைக்குறிச்சி – வரணியைச் சொந்த இடமாகக் கொண்ட குறித்த நபர் கடந்த 13ஆம் திகதி கிளிநொச்சியில் அவரது அச்சகத்துக்குச் சென்றுகொண்டிருந்தவேளையில் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என அவரது மனைவியால் காவல்துறையில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்தது.

உடல் முழுவதும் அடிகாயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள குடும்பத்தினர், அவர் மிகவும் அச்சமடைந்திருப்பதாகவும், நடந்தவற்றைக் கதைப்பதற்கு அச்சப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கடத்தப்பட்டவர் விடுவிக்கப்பட்டதை உறுதிப்படுத்திய யாழ்ப்பாண மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண இணைப்பாளர், குறித்த நபரிடமிருந்தும் தாம் வாக்குமூலத்தைப் பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Posts