Ad Widget

கால்பந்து போட்டியில் கைகலப்பு: அணிக்கு தடை

அராலி பாரதி விளையாட்டுக்கழக மைதானத்தில் வைத்து கடந்த மாதம் 24 ஆம் திகதி மத்தியஸ்தர் மற்றும் போட்டி ஏற்பாட்டாளர்களை தாக்கிய, அராலி துனைவி சென்.ஸ்ரார் விளையாட்டுக் கழக அணிக்கு ஒரு வருடகால தடை உத்தரவு பிறப்பபிக்கப்பட்டுள்ளதாக வலிகாமம் கால்ப்பந்தாட்ட லீக் நிர்வாகம் செவ்வாய்க்கிழமை (09) தெரிவித்தது. அத்துடன், 75 ஆயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டுள்ளதாக லீக் அறிவித்துள்ளது.

லீக் நிர்வாக சபை கூட்டத்தில் மேற்படி தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, அராலி துனைவி சென்.ஸ்ரார் விளையாட்டுக் கழக அணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக லீக் தெரிவித்தது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

‘அராலி பாரதி விளையாட்டு கழகம், அணிக்கு 7 பேர் கொண்ட கால்ப்பந்தாட்ட சுற்றுப்போட்டியை தனது விளையாட்டுக்கழக மைதானத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் நடத்தியது.

ஓகஸ்ட் 24 ஆம் திகதி இடம்பெற்ற போட்டியில், அராலி துனைவி சென் ஸ்ரார் அணியும் சென்.தோமஸ் அணியும் மோதின.

இதில் சென்.தோமஸ் அணி வெற்றிபெற்றிருந்தது. இந்நிலையில் போட்டி முடிவடைந்ததும், அராலி துனைவி சென் ஸ்ரார் அணி வீரர்கள் மத்தியஸ்தரை தாக்கியதுடன், அதனை தடுக்க சென்ற போட்டி ஏற்பாட்டாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து, வட்டுக்கோட்டை பொலிஸார் மைதானத்திற்குள் நுழைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதனைத் தொடர்ந்து போட்டி ஏற்பாட்டாளர்களால், வலிகாமம் கால்ப்பந்தாட்ட லீக்கிற்கு இது தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து, தடை மற்றும் தண்டம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts