Ad Widget

காலம் தாழ்த்தாது பாராளுமன்றைக் கலைப்பதே சிறந்தது – சுமந்திரன்

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ஜனாதிபதியை வைத்துக்கொண்டு நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.

இதனால் அவரை பதவியில் இருந்து விலகச் செய்ய வேண்டும். அத்துடன் பாராளுமன்றம் அதற்கான முறைமையை மீறியுள்ளது.

இதனால் பாராளுமன்றத்தை காலம் தாழ்த்தாது கலைப்பதே சிறந்தது. இவற்றைச் செய்வதற்கு தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் பல மில்லியன் டொலர்களை நாடு இழக்க நேரிடுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உரை மற்றும் குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்த நாடு முன்னெப்போதும் இல்லாத நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இந்த பாராளுமன்றம் கூடும் ஒவ்வொரு முறையும் மக்கள் எதிர்பார்ப்புகளுடன் பார்க்கின்றனர்.

பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவர்கள் ஒவ்வொரு முறையும் ஏமாற்றமடைகின்றனர்.

இந்த பாராளுமன்றம் ஆரம்பிக்கப்படும் போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசாங்கம் அமைக்கப்பட்டது. அதன்போது ஜனாதிபதியின் அதிகாரங்களை பலப்படுத்த 20 ஆவது திருத்தத்தை கொண்டு வந்தனர்.

சுபீட்சமான நோக்கு என்று தேர்தல் விஞ்ஞாபனத்தை கொண்டு வந்திருந்தார்கள். அதனை நாடு இருக்கும் நிலைமையுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அதில் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த தற்போதைய ஜனாதிபதி விசேட முன்மொழிவு ஒன்றை முன்வைத்துள்ளார்.

அதில் வருமான வரி, பெறுமதி சேர் வரி, தேசத்தை கட்டியெழுப்பும் வரி என்று பல்வேறு வரிகள் குறைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

அப்போது நாட்டின் நிதி அமைச்சராக இருந்த மங்கள சமரவீர, இந்த முன்மொழிவுகளை அமுல்படுத்தினால் இலங்கை லெபனான் போன்று நெருக்கடிக்குள் தள்ளப்படும் என்று கூறியிருந்தார். அவரின் எச்சரிக்கை இன்று உண்மையாகியுள்ளது.

தற்போதைய ஜனாதிபதியை பலமான நபர், பலமான தலைவர் என்றே அன்று மக்களுக்கு கூறப்பட்டது. அவ்வாறு பலமான ஒருவரையா நாங்கள் கொண்டிருக்கின்றோம்.

வாக்காளர்களின் உணர்வை தூண்டும் வகையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் போன்றவையும் நடத்தப்பட்டிருந்தன. இந்த பொருளாதார நெருக்கடிக்கு அவரே பொறுப்பாக இருக்கின்றார். அவர் இன்னும் ஜனாதிபதி பதவியிலும் இருக்கின்றார்.

இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவரை வைத்துக்கொண்டு நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.

பிரதமர், அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர், திறைசேரி செயலாளர் ஆகியோர் இராஜினாமா செய்தனர். இதற்கு காரணம் என்ன?. அதேபோன்று அரசாங்கத்தில் இருந்தவர்கள் ஏன் சுயாதீன தரப்பினராக மாறியுள்ளனர்.

இந்நிலையில் இந்த பாராளுமன்றம் இன்னும் அரசு, எதிர் தரப்பு என்று இருக்க முடியாது. சுயாதீன உறுப்பினர்களையும் கொண்டிருக்க முடியாது.

ஒவ்வொருவரும் எழுந்து சுயாதீனம் என்று கூறிக்கொள்கின்றனர். ஆனால் அவ்வாறு இருக்க முடியாது. நிலையியல் கட்டளைக்கு அமைய அரசாங்கம், எதிர்க்கட்சியாக மட்டுமே இருக்கலாம். சுயாதீனம் என்பது எங்களின் முறையல்ல.

எவ்வாறாயினும் ஜனாதிபதி நிச்சயமாக வெளியேற வேண்டும். ஜனாதிபதியே தவறு செய்தவர். அவர் மக்கள் ஆணையையும் மீறிவிட்டார்.

மூன்றில் இரண்டுடன் ஆட்சிக்கு வந்தாலும் இப்போது அரசாங்கத்திற்குள் குழுக்கள் அமைக்கப்பட்டதால் மக்கள் ஆணையை அது இழந்துள்ளது.

இதன்படி பாராளுமன்றம் அதன் சட்டபூர்வ தன்மையை இழந்துள்ளது. இதனால் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். ஏற்கனவே கலைக்கப்பட்ட நிலைமையிலேயே இருக்கின்றோம். அதனால் இதனை முறையாக கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சர்வதேச நாடுகள் முதலில் அரசியல் ஸ்தீரத்தன்மை இருக்க வேண்டும் என்றே கூறுகின்றன. இந்த பாராளுமன்றம் இவ்வாறு இருக்கையில் எப்படி ஸ்தீரதன்மையை பேண முடியும்.

நாங்கள் பிரச்சினையின் ஒரு பகுதியாக இருக்கின்றோம். மக்கள் தீர்வுகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இப்படி இருந்துகொண்டு எங்களால் தீர்வுகளை வழங்க முடியாது. தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் பல மில்லியன் டொலர்களை இழக்க நேரிடுகின்றது.

இதேவேளை 21 ஆவது திருத்த விடயத்தில் அமைச்சரவையினாலோ, பாராளுமன்றத்தினாலோ எதனையும் செய்ய முடியாத நிலைமையே காணப்படுகின்றது.

இதில் இருந்து நாங்கள் நகர்ந்து முன்னோக்கி செல்ல வேண்டும். அரசியலமைப்பு திருத்தம் என்ன என்று நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றோம் என்றார்.

Related Posts