Ad Widget

காரைநகர் வேணன் அணை புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

காரைநகரின் பிரசித்திபெற்ற வேணன் அணைக்கட்டைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. இதனை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று திங்கட்கிழமை (31.08.2015) சம்பிரதாய பூர்வமாகத் தொடக்கி வைத்துள்ளார்.

4

காரைநகர் குடிநீர்ப்பற்றாக்குறைவு நிலவுகின்ற ஒரு பிரதேசம். இதனால், மழைநீரை வீணாகக் கடலினுள் கலக்கவிடாது தேக்கி நிலத்தடிநீரை அதிகரிக்கச் செய்யும் நோக்குடன் வேணன் அணைக்கட்டு உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு விவசாயிகள் சிலர் வேணன் அணைக்கட்டைச் சேதமாக்கியதால், தேக்கப்பட்டிருந்த மழைநீர் கடலுடன் கலந்தது. இது, விவசாய அமைச்சின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து ஏறத்தாழ 7000 மணற்பைகளின் உதவியோடு சேதமாக்கப்பட்ட அணைக்கட்டுப்பகுதி அப்போது தற்காலிகமாகப் புனரமைக்கப்பட்டது.

தற்போது அணைக்கட்டை நிரந்தரமாகவே புனரமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இதற்கென வடமாகாண விவசாய அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து 3 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அணையைப் புனரமைப்பதன் மூலம் வலந்தலை, பிட்டியோடை, ஊரி, மொந்திபுலம் கிராம மக்களைச் சேர்ந்த 500 விவசாயக் குடும்பங்கள் பயன் அடையும் எனவும், 250 ஏக்கர் அளவில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேணன் அணை புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதேசமயம், ஏககாலத்தில் புங்குடுதீவு பெரியகிராய்குளம், திருநெல்வேலி பரவைக்குளம், செம்மணி – கோப்பாய் வெள்ளநீர்த் தடுப்பணைஆகியவற்றை புனரமைக்கும் பணிகளும் ஆரம்பமாகியுள்ளன. இவற்றுக்கு வடமாகாண விவசாய அமைச்சின் நிதியிலிருந்து 11.2 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தினூடாக முன்னெடுக்கப்படும் இப்புனரமைப்பு வேலைகள் யாவும் எதிர்வரும் கார்த்திகை மாதத்துக்கு முன்பாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படங்கள்..

Related Posts