Ad Widget

காணாமல் போனவர்கள் பற்றிய நிலைப்பாட்டை மாற்றிய இராணுவ அதிகாரி

இறுதி யுத்தம் முடிவடைந்த போது ராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் தெரியும் என முன்பு சாட்சியம் அளித்த ராணுவ அதிகாரி ஒருவர், ​நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் அதுபற்றி எதுவும் தெரியாது எனத் தெரிவித்திருக்கிறார்.

அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒருவராகிய நடேசு முரளிதரன், அவருடைய மனைவி ஜெயக்குமாரி, அவர்களுடைய ஐந்து வயதான தாருஷன், இரண்டு வயதான அபித்தா ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காணாமல் போயிருப்பது தொடர்பான விசாரணை முல்லைத்தீவு நீதிமன்றத்தில், நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விசாரணையின்போது சாட்சியமளித்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்தன என்பவரே காணாமல் போனவர்கள் தொடர்பில் எதுவும் தெரியாது எனத் தெரிவித்திருக்கின்றார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காணாமல் போயிருப்பது தொடர்பில் கந்தசாமி பொன்னம்மா இந்த ஆட்கொணர்வு மனு வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

முன்னைய குறுக்கு விசாரணையொன்றின் போது, ராணுவத்தினரிடம் இறுதி யுத்தத்தின்போது சரணடைந்தவர்கள் பற்றிய விவரப்பதிவுப் பட்டியல் ராணுவத்தினரிடம் இருப்பதாகத் தெரிவித்திருந்த மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்தனவை அந்த ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

ஆயினும் ராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ள 11 ஆயிரம் பேர் கொண்ட பெயர்ப்பட்டியலையே சமர்ப்பித்திருந்தார்.

நீதிமன்றம் கோரியிருந்த ஆவணத்திற்குப் பதிலாக இந்த ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆட்சேபம் தெரிவித்திருந்த வழக்காளிகள் தரப்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல், 2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவடைந்ததையடுத்து, ராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த வழக்கு வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது,

விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளரராக இருந்த எழிலன் என்றழைக்கப்படும் சின்னத்துரை சசிதரனின் மனைவி அனந்தி சசிதரன், கிருஸ்ணகுமார் ஜெயக்குமாரி, விஸ்வநாதன் பாலநந்தினி, கந்தசாமி காந்தி, கந்தசாமி பொன்னம்மா ஆகியோர் இந்த ஆட்கொணர்வு மனு வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts