Ad Widget

காணாமற்போன வல்வெட்டித்துறை மாணவர்கள் கொழும்பில் மீட்பு

கடந்த ஜூன்மாதம் 30ஆம் திகதி முதல் காணாமற்போன வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மூன்று பாடசாலை மாணவர்களும் கொழும்பு கொம்பனித் தெருவில் இருந்து வியாழக்கிழமை (02) மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த எஸ்.விஸ்ணுராஜா (வயது 15), கம்பர்மலையைச் சேர்ந்த இ.தர்ஷன் (வயது 16), வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பா.சுகிர்தன் (வயது 15) ஆகிய 3 சிறுவர்களுமே காணாமற் போயிருந்தனர்.

வவுனியாவில் உறவினர் ஒருவரின் பிறந்ததின நிகழ்வுக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர்கள் அங்கும் செல்லவில்லையெனவும் மீண்டும் வீடு திரும்பவில்லையெனக்கூறி உறவினர்கள் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் கொம்பனித் தெருவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றுக்குச் வியாழக்கிழமை (02) சென்ற 3 சிறுவர்கள் தங்களுக்கு வேலை தருமாறு கோரியுள்ளனர்.

சிறுவர்கள் மீது சந்தேகம் கொண்ட ஹோட்டல் உரிமையாளர், சிறுவர்களின் பெற்றோர்களின் தொலைபேசி இலக்கத்தை சிறுவர்களிடமிருந்து பெற்று, பெற்றோருக்கு தகவல் கொடுத்தார்.

அத்துடன், கொம்பனித் தெரு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சிறுவர்களை மீட்ட பொலிஸார் அவர்களை வியாழக்கிழமை(02) இரவு அவர்களது உறவினர்களுடன் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வல்வெட்டித்துறைப் பொலிஸார் சிறுவர்களை பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் விசாரணையின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் கூறினர்.

Related Posts