யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக் கட்டடம் இடிக்கப்பட்டு அதன் கம்பிகள் வெளியாரால் அங்கிருந்து எடுத்துச் செல்லப்படுகின்றன என்று வலி. வடக்குப் பிரதேச சபை உப தலைவர் சஜீவன் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்குகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- காங்கேசன்துறையில் அமைந்துள்ள சீமெந்துத் தொழிற்சாலைக் கட்டடங்கள் அண்மைக் காலமாக இடிக்கப்பட்டுவருகின்றன.
இதற்கான அனுமதியை யார் வழங்கினர் என்பது தெரியாது.
அதேபோல கட்டடங்கள் இடிக்கப்படும் போது இரும்புக் கம்பிகள் அங்கிருந்து வாகனங்கள் மூலம் வெளியாரால் எடுத்துச் செல்லப்படுகின்றன.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.